Friday, August 28, 2015

பொம்மையானேன்


தலை வாரிவிடுகின்றார்கள் என ஆரம்பித்தார்கள் குழலியும் செழியனும். நானும் அலுவலகத்திற்கும் மட்டம், குழலியும் மட்டம். காரணம் எதுவும் இல்லை. ஜஸ்ட் லைக் தட். முடிவாரிவிடும்போதே அப்பா மசாஜ் செய்யறோம் என எண்ணெய் எடுத்துவந்தாள் குழலி. உச்சந்தலையில் எண்ணெய்விட்டு அடிக்க ஆரம்பித்தார்கள். குழலி கூட பரவாயில்லை இன்னொரு சின்னகை டாம்டூம் என அடித்தது. கொஞ்ச நேரத்தில் வலது பக்கத்திற்கு வந்தார்கள். அப்புறம் இடது பக்கம். பொம்மையின் தலையை திருப்புவதுபோல திருப்பி திருப்பி மசாஜ். ஒருத்தி மசாஜ் செய்ய ஒருத்தர் பவுடர் அடித்துக்கொண்டு வந்தார். கழுத்து முகம் எல்லாம் பவுடர். முடிக்கு கூட போட்டுவிட்டார். வாசலுக்கு சென்று குழாயில் தண்ணீர் எடுத்துவந்து முகத்தை துடைத்தான். பாவம் அவனுக்கு இன்னும் தண்ணீரை கையில் ஏந்திவர தெரியவில்லை. நனைந்த கையால் துடைத்தான். பின்னர் தலைவாரப்பட்டது. அந்த சீப்பு குத்துது என வேறு சீப்பு மாற்றப்பட்டது. செழியனை நல்லவேளை வித்யா குளிக்க அழைத்துசென்றுவிட்டாள். அடுத்து திருநீறு. முதலில் விரல் அளவிற்கு வைத்தாள். பின்னர் பட்டை போட்டாள். சரியாக வரவில்லை என நெற்றியை கழுவினாள். வைத்தாள் கழுவினாள். ‘அப்பா குட்நைட்’ என காலை தூங்கும் செஷனுக்கு சென்றான் செழியன். கண்ணாடியை வேற முதலிலேயே கழுற்றவிட்டார்கள். என்ன நடக்குது என்றே தெரியவில்லை. மசாஜிற்கு சொக்கியது. “அப்பா சிட் ப்ராப்பர்லி” என கட்டளைவேறு. திருநீறு சரியாக இல்லை என கலர்கலர் சாந்து டப்பா வந்தது. கலர் காம்பினேஷன் சரியில்லை என 4 முறை நெற்றி கழுவப்பட்டது. கடைசியாக திருநீறு கொஞ்சம் எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி பட்டையடித்தாள். உண்மையை சொன்னால் நெற்றி முழுக்க தேய்த்துவிட்டாள். ஒவ்வொரு நிலையிலும் கெக்கபெக்கே கெக்கபெக்கே என சிரிப்பு. அடுத்து செல்பி செஷன் வேறு. அப்பா கண்ணை திறந்து சிரிங்க. ஈ சொல்லுங்க. சொக்கிக்கொண்டு வந்தது. கடைசியாக கண்ணாடி போட்டு கண்ணாடி முன்னர் நின்றால் கண்ணாடியில் நான் தெரியவில்லை வேற யாரோ இருந்தாங்க.

No comments:

Post a Comment