குழலி உறங்கிக்கொண்டிருந்தாள். முன்னிரவு உள்ளிருந்து அந்த ஆரஞ்சு குதிரை வெளியே வந்திருந்தது. குழலியின் சின்ன வயசு பொம்மை. பிடித்தமான பொம்மை. அதன் காதில் ஊர் பெயர் சொல்லிவிட்டு அதனை அருகே படுக்கப்போட்டால் கனவில் அந்த இடத்திற்கு கூட்டிச்செல்லும் என இன்றும் நம்புகின்றாள். அந்த பொம்மையை வைத்து கொஞ்சம் கதை ஓடிக்கொண்டிருந்தது காலை வேளையில். பொம்மையை என் காதருகில் வைத்து “அப்படியா?” என்றேன். செழியனிடம் திரும்பி “செழியன் நீ குட் பாயாமே. தினமும் காலையில எழுந்தது கக்கா போயிடுவியாம். அப்படியா?” என்றேன். “அப்படி” என்றான்.
“ஓ..தினமும் பல் தேய்ச்சிடுவானா?”
“ஆமா”
“ஓ தினமும் அழாம அம்மாகிட்ட சாப்பிட்டுவானா”
“ஆமா”
“தினமும் குட்பாயா அழாம குளிச்சிடுவானா?”
“ஆமா”
“சாப்பிட்டு, குளிச்சிட்டு யானையில் தூங்கிடுவானா”
“ஆமா”
“அக்காகிட்ட சண்டை போடாம இருப்பானா”
“ஆமா”
”செழியன் எப்படிடா இந்த குதிரைக்கு எல்லாம் தெரியுது. உன்னை டெய்லி பாக்குதா?”
”ஆமா”
குழலி எழும் சமயம் வந்தது. எழுப்பவில்லையெனில் உள்ளிருந்து கூக்குரல் வரலாம். குழலியை எழுப்பிக்கொண்டிருந்தேன்.
“அப்பியா” என குரல். செழியன் காதிற்கு அருகில் அந்த ஆரஞ்சு குதிரை.
#தேவதைகள்_வாழும்_வீடு
No comments:
Post a Comment