Friday, August 28, 2015

தாம்தூம் சொறக்கா டூம்


“தாம்தூம் சொறக்கா டூம்” - குள்ளனின் குட்டிக்கதைகள்.

குள்ள மனிதனைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம் அவனே தான். கட்டைவிரல் அளவிற்கு மட்டுமே வளர்ந்த அவனைப் பற்றிய கதைகள் தான் குள்ளனின் லீலைகள்.

நீண்டவருடங்களுக்கு முன்னர் நடந்த கதைகள் இவை.

குள்ளன் படிப்பறிவு இல்லாதவன்.குள்ளன் ஒரு குறும்புக்காரன். குள்ளன் ஒரு சோம்பேறி. ஏதோ கோளாறினால் அவன் பெரிதாக வளார்வதற்கு பதிலாக உடல் சிறுத்துக்கொண்டே சென்றான். இப்போது உங்கள் கட்டைவிரல் அளவிற்கு தான் இருக்கின்றான். சரி கதைக்கு வருவோம். குள்ளனுக்கும் நெட்டையளுக்கும் திருமணமாகி மூன்று மாதம் ஆகின்றது. குள்ளன் எந்த வேலையும் செய்யவில்லை. அதனால் தினமும் வீட்டில் திட்டு தான். வேலை செய்யவில்லை என்றால் யார் தான் சும்மா இருப்பாங்க சொல்லுங்க.

குள்ளனுக்கு கோழிக்கறி என்றால் கொள்ளை பிரியம். அவன் அம்மாவிற்கு கோழிக்கறி சமைக்க தெரியாதலால் அவன் இதுவரை கோழிக்கறி குழம்பை சாப்பிட்டதே இல்லை. ஆனால் அதன் ருசியினைபற்றி நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கின்றான். நண்பர்களிடம் கேட்கவும் அவனுக்கு தயக்கம். திருமணம் நடந்ததும் ஒரு நாள் தன் நெட்டை மனைவியிடம் முழுக்கோழி ஒன்றினை வாங்கி வந்தான், கோழிக்கறி குழம்பு செய்து வைக்கச் சொன்னான். தன் நண்பர்களிடம் சென்று இன்று தான் கோழிக்கறி குழம்பு சாப்பிடப்போவதாக பெருமையாக பேசிவிட்டு வீடு வந்தான். வந்தவனுக்கு அதிர்ச்சி. தன் மனைவி சமைக்கும் போது குழம்பை ருசி பார்த்து இருக்கின்றாள், மிகவும் ருசித்ததால் அனைத்து குழம்பையும் அவளே சாப்பிட்டுவிட்டாள். குள்ளனுக்கு கோபம் வந்ததுவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு உடைத்தான். யார் சொல்லியும் கேட்கவில்லை. அடங்கவில்லை.

கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியே வந்தான். வழியில் ஒரு முனிவரை சந்தித்தான். கோவமுடன் இருந்த குள்ளனை சாந்தப்படுத்தினார். சமாதானம் செய்ய உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு குள்ளன், தான் யாரை பார்த்து ஒரு மந்திரம் சொன்னாலும் அவர்கள் சிலையாகி விடவேண்டும். அப்படிப்பட்ட மந்திரத்தை எனக்கு சொல்லி கொடுங்கள் என்றான். வேதனையுற்ற முனிவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு குள்ளனின் காதில் அந்த மந்திரத்தை கூறினார். அந்த மந்திரம் தான் “தாம்தூம் சொறக்கா டூம்”.

மந்திரம் வேலை செய்கின்றதா என்பதை பரிசோதிக்க அவன் வீட்டு அருகே எப்போது அவனை துரத்தும் நாயிடம் அந்த மந்திரத்தை கூறினான். நாய் சிலையானது. ஆஹா மந்திரம் வேலை செய்கின்றது என உறுதிபடுத்திக்கொண்டான். அன்று மாலையே மீண்டும் முழுக்கோழி வாங்கிக்கொண்டு மனைவியிடம் கொடுத்தான். குழம்பு சமைக்க சொல்லிவிட்டு வாசலில் வந்து உறங்கினான். மனைவி மீண்டும் அதே போல செய்துவிட்டள். அனைத்து கோழி குழம்பையும் குடித்துவிட்டாள். உள்ளே சென்ற குள்ளனுக்கு கடும் கோபம். எதுவும் பேசாமல் நின்றுகொண்டு இருந்தாள் மனைவி. உடனே “தாம்தூம் சொறக்கா டூம்” என்று தன் மனைவியினை பார்த்து கூறினான். தன் மனைவி அப்படியே சிலையாக மாறிவிட்டாள்.

வாசலில் வந்து அமர்ந்தான். வழிப்போக்கர்கள் தெருவின் முனையில் உள்ள திருமண மண்டபத்தில் கோழிக்கறி விருந்து நடப்பதாக பேசிக்கொண்டு சென்றனர். குள்ளன் அங்கே விரைந்தான். மண்டப வாசலில் அவனை திருமணம் நடத்துவோர் மடக்கி அழைப்பிதழ் இருக்கின்றதா என்றனர். இல்லை என்றதும் அவனை விடவில்லை. அவன் தன் மந்திரத்தை பயன்படுத்தி மடக்கியவர்களை சிலையாக்கினான்.

மண்டபத்திற்குள் நுழைந்து அங்கிருந்த எல்லோரையும் பார்த்து 'தாம்தூம் சொறக்கா டூம்' என்றதும் அனைவரும் சிலையானார்கள். மணமக்களையும் குள்ளன் சிலையாக்கினான். சமையல்கட்டிற்கு சென்று சமையல் செய்து கொண்டு இருப்பவர்களை சிலையாக்கினான். அங்கே அண்டா முழுக்க கோழிக்குழம்பு. அண்டா முழுக்க இருந்த மொத்த கோழிக்குழம்பையும் குடித்தான்.

அளவுக்கு மீறி உண்டுகொண்டே இருந்தான் குள்ளன். வயிறு பெருத்தது. அவனால் நடக்கமுடியவில்லை. மெல்ல மெல்ல நடந்து மீண்டும் ஒரு இறைச்சி துண்டை கடித்தான். வாயினை திறக்கவில்லை. காக்கா ஏதேனும் கொத்தி சென்றுவிடும் அல்லவா. அவன் தொண்டைவரை உணவு இருந்தது. எப்படியோ கஷ்டப்பட்டு கண்ணாடி முன்னர் நின்றான். வயிற்றுவலி தாங்கவில்லை. கண்ணாடியில் அவனைப் பார்த்து “தாம்தூம் சொறக்கா டூம்” என்று சொல்லி அவனும் சிலையானான்.

எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த முனிவர் சிலையான அனைவரையும் “ம்டூ காக்றசொ ம்தூம்தா” என்ற மந்திரம் மூலம் உயிர்பெறச்செய்தார். என்ன நடந்தது என்றே அனைவரும் மறந்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து வாழ்கையினைத் தொடர்ந்தார்கள். அதன் பிறகு அந்த மந்திரத்தை முனிவரும் மறந்துவிட்டார் குள்ளனும் மறந்துவிட்டான். நீங்களும் மறந்துவிடுங்கள். மறந்துகூட இதை நினைவில் வைத்துக்கொள்ளாதீர்கள்.



No comments:

Post a Comment