Friday, August 28, 2015

குமாரின் சுற்றுலா


குமார் ஐந்தாம் வகுப்பிற்குச் செல்கிறான். முதல் நாளில் இருந்தே அவன் கனவு அந்த வருட சுற்றுலாவிற்குச் செல்வது தான். அப்பா ஆட்டோ ஓட்டுனர். அம்மா வீட்டின் அருகே இருக்கும் துணிக்கடையில் வேலை செய்கிறாள். குமார் முத்தையா மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறான். முத்தையா என்கின்ற பெரியவர் ஒருவர் இந்தப் பள்ளியை நிர்வகிக்கிறார். நல்ல மனம் படைத்தவர். குமார் போன்ற ஏழை மாணவர்களுக்குப் புத்தகத்திற்கான கட்டணம் மட்டும் வாங்கிக் கொள்வார். குமார் ஓரளவு சுமாராகத் தான் படிப்பான். 

அவன் கனவினைச் சொல்லவில்லையே. அவன் அந்த வருடத்தின் கனவெல்லாம் அவர்கள் பள்ளியிலிருந்து வருடா வருடம் செல்லும் சுற்றுலாவிற்குச் சென்று வருவது தான்.நான்காம் வகுப்பில் படிக்கும் போது சுற்றுலா செல்லும் சமயம் வீட்டில் காசில்லாமல் போய்விட்டது. அதனால் குமாரால் சுற்றுலாவிற்குச் செல்ல முடியவில்லை. நண்பர்கள் சென்று வந்து அவர்கள் அனுபவத்தைச் சொன்னபோது பேராசையாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் அழுதான். அடுத்த வருடம் எப்படியும் தானும் சுற்றுலாவிற்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தான். சின்ன உண்டியல் தயார் செய்தான்.எப்போதெல்லாம் காசு கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் அதில் சேமித்து வந்தான். ஊரில் இருந்து அத்தை, பாட்டி வரும் போது காசு கொடுப்பார்கள், அதையும் போட்டு வைத்தான். கடைக்குச் சென்று வரும்போது மீதம் இருக்கும் ஒரு ரூபாய், 50 காசுகளை அம்மாவின் அனுமதியோடு உண்டியலில் போட்டுச் சேமித்து வந்தான். 

ஐந்தாம் வகுப்பில் நாட்கள் வேகமாக நகர்ந்தன. ஒரு நாள் ஆசிரியர் வகுப்பிறகு வந்து "அடுத்த வாரம் சென்னைக்குச் சுற்றுலா செல்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் தங்களது பெயரை 3 நாட்களுக்குள் தெரிவுக்க வேண்டும்'' என்றார். ''கட்டணம் 200/- ரூபாய்" என்றார்கள். குமாருக்கு உண்டியலில் 200 ரூபாய் சேர்ந்து இருக்குமா இல்லையா என்ற சந்தேகம். வீட்டிற்குச் சென்று உடைத்துப் பார்த்தான். 128 ரூபாய் இருந்தது. அப்பாவிடம் தனக்கு 72 ரூபாய் வேண்டும் என்று கேட்டான். ஆசிரியரிடம் பெயரும் கொடுத்துவிட்டான். சுற்றுலா கட்டணத்தைக் குமார் மட்டும் கட்டவில்லை மற்றவர்கள் கட்டிவிட்டார்கள். அவன் அப்பா கடைசி நாள் தான் தர முடியும் என்றார்.ஆசிரியரிடம் பேசி பேருந்தில் ஏறுவதற்கு முன்னர் தரவேண்டும் என்ற ஒப்புதல் பெற்றான்.அன்றிருந்து தினமும் சுற்றுலா பற்றிய கனவு தான். 

மறுநாள் சுற்றுலா. அன்றிரவு தூக்கமே வரவில்லை.அம்மாவிடம் தனக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று சொல்லிவிட்டான். பேருந்தில் யார் அருகினில் உட்கார வேண்டும் என முடிவுச் செய்துவிட்டான். புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவேயில்லை. சென்னை எப்படி இருக்கும்? படத்தில் காண்பிப்பது போல அழகாக இருக்குமா? நிறைய மக்கள் இருப்பார்களா? மெரினா கடற்கரையில் குளிக்கலாம்.ஏதாவது கதாநாயகனை பார்க்கலாம்.முதலமைச்சரை வழியில் காணலாம். இன்னும் ஏகப்பட்ட யோசனைகள். 

காலை சரியாக 5.30 மணிக்கு பள்ளிக்குப் பேருந்து கிளம்பும், 5 மணிக்கு பள்ளிக்கு வரவேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.குமார் 4 மணிக்கே தயாராகிவிட்டான்.அம்மாவை எழுப்பிக் காலை, மதிய உணவினை செய்து தரச்சொன்னான். அப்பா இரவு வரவில்லை, இந்த வாரம் இரவில் வண்டி ஓட்டுகின்றார். முடிந்தால் வந்து பள்ளியில் விடுவதாகவும், இல்லையெனில் குமாரே பள்ளிக்கு செல்லுமாறும் சொல்லிவிட்டு சென்று இருந்தார் அப்பா. காலை 4.30 மணியாகியும் அவர் வரவில்லை, அதனால் தானே கிளம்பி பள்ளிக்குச் சென்றான். 

விடியற்காலை என்பதால் இன்னும் இருட்டாகத் தான் இருந்தது. பள்ளி நெருங்கும் தெரு முனையில் முனகல் சத்தம் கேட்டது. முதலில் பயந்துவிட்டான், பின்னர், சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்வை திருப்பினான். வயதான பாட்டி ஒருத்தியின் முனகல் தான் அது. கூனிக்குறுகியத் தெருவின் ஓரத்தில் உள்ள ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் படுத்திருந்தாள். வாடிய முகம். இரவெல்லாம் கத்தி தொண்டை வரண்ட சத்தம். 

"என்ன பாட்டி? என்னாச்சு?" 

"இரண்டு நாளா சாப்பிடல." பாட்டியிடம் இருந்து ஒரு பெரும் மூச்சு " உடம்புக்கு முடியல.மருத்துவரை பார்க்க காசில்லே.ஆங்.." மீண்டும் முனகல் யோசித்தான் குமார். தன் சுற்றுலா முக்கியமா, இல்லை இந்தப் பாட்டி முக்கியமா என்று. தன் கையில் இருந்த 200 ரூபாயும், காலை மதிய உணவு பொட்டலத்தையும் கொடுத்துவிட்டு, தனது வீட்டை நோக்கி மெல்ல நடந்தான். 

பாட்டியிடம் அனைத்தையும் கொடுத்துவிட்டாலும் தன் சுற்றுலா ஆசை நிறைவேறவில்லையே என்று, அழுது கொண்டே அம்மாவிடம் நடந்ததைச் சொன்னான். வாரி அணைத்துக்கொண்டாள் அம்மா. வாசலில் யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டது. அம்மா சென்று திறந்தாள். அங்கே குமாரின் ஆசிரியர் நின்றுகொண்டிருந்தார்.பயந்துவிட்டான் குமார். அவன் வீட்டு வாசலில் பள்ளி பேருந்து நின்று கொண்டிருந்தது .மாணவர்கள் "ஹோ" எனச் சத்தமிட்டு குதூகலித்தபடி. 'குமார் சீக்கிரம் வாடா'.. 

"நான் வரவில்லை சார். பணம் இல்லை". அழுதுகொண்டே கூறினான் குமார். 

"குமார் உன் நற்செயலை நம் பள்ளி முதல்வர் முத்தையா தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறார். அந்தப் பாட்டியை அவர் மருத்துவமனையில் சேர்த்துவிட்டா.உனக்கு தன் பாராட்டினை தெரிவித்து, வீட்டிற்குச் சென்று சுற்றுலாவிற்கு அழைத்து வர கூறினார். நீ என் மாணவன் எனச் சொல்லிக் கொள்வது பெருமையாக இருக்கின்றது குமார்"

அம்மா ஆனந்த பூரிப்பில் தன் மகன் சுற்றுலா செல்வதைப் பார்த்து கையசைத்தாள். ஹே என்ற சத்தம் ஓய வெகுநேரமானது.



No comments:

Post a Comment