Friday, August 28, 2015

நிறம் மாறிய உலகம்


இன்னைக்கு ரம்யாவிற்கு எட்டாவது பிறந்தநாள். நாள் முழுக்க அவளுடைய நண்பர்கள் வாழ்த்துக்களைச் சொன்னாங்க. அவளுடைய அப்பா அவளுக்கு ஒரு பரிசு தரேன்னு சொல்லி இருந்தாரு. அதனால வாசல்ல காத்துகிட்டு இருக்கா. இதோ அவங்க அப்பா வந்துட்டாரு. கையில ஒரு பெரிய பெட்டி வேற. அது தான் அவளுக்கு பிறந்தநாள் பரிசு போல. ஒரு கூண்டும் அதற்குள்ள ஒரு கிளியும். ஐ!! ரம்யாவுக்கு ரொம்ப சந்தோஷம். அவளுடைய ரொம்ப நாள் ஆசையும் அது தான். எல்லா கிளையைப் போலவே இந்த கிளியும் பச்சை நிறத்தில் தான் இருந்துச்சு. மூக்கு சிகப்பா இருந்துச்சு. அதுக்கு என்ன பேரு வெக்கலாம்னு யோசிச்சு யோசிச்சு ‘கீக்கீ’ன்னு பேரு வெச்சிட்டா ரம்யா.

இப்ப கீக்கியும் ரம்யாவும் செம நண்பர்கள். எப்பவும் ரம்யா கீக்கியுடன் தான் இருக்கா. கீக்கீ கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சிடுச்சு. முதல்ல சொன்ன வார்த்தையே ‘ரம்யா’ தான். ரம்யா அதுக்கு தேவையான சாப்பாடு தண்ணி எல்லாம் ஒழுங்கா கொடுத்திட்டு வந்தா. இப்படியா போயிட்டு இருந்த சந்தோஷாமான நேரத்தில தான் அந்த சம்பவம் நடந்தது.

ஒரு நாள் காலையில எழுந்து பார்த்தா...உலகமே மஞ்சள் நிறத்துக்கு மாறி இருந்துச்சு. வானம் மஞ்சள் நிறம், கடல் மஞ்சள் நிறம், காடு, மலை, மக்கள், காரு, பங்களா, குடிசை, ஷூ, சைக்கிள், ரோடு, கடை,வீடு, வீட்டுக்குள்ள இருக்கிற சாமான் எல்லாமே மஞ்சள் நிறத்துக்கு மாறி இருந்துச்சு. எல்லோருக்கும் ஒரே குழப்பம் என்னடா இது இப்படி மஞ்சளா மாறிடுச்சேன்னு. அப்ப தான் ரம்யா ஒரு விஷயத்தை கவனிச்சா உலகமே மஞ்சள் நிறத்துக்கு மாறி இருந்தாலும் கீக்கீ மட்டும் அதே பச்சை நிறத்தில இருந்துச்சு. 

உலகமே மஞ்சள் நிறத்தில் இருக்கு, இந்த கீக்கீ மட்டும் வேற நிறத்தில இருக்குன்னு அவங்க தெருவில இருக்கிற மக்கள் கீக்கீயை அதிசயமா பார்க்க வந்தாங்க. கொஞ்ச நாள்ல அந்த பகுதி மக்கள் வந்தாங்க, கொஞ்ச நாள்ல அந்த ஊர்ல இருக்க எல்லாரும் வந்து பார்க்க ஆரம்பிச்சாங்க.

ஒரு வாரம் கழிச்சு ஒரு காலையில உலகம் சிகப்பு நிறந்துக்கு மாறி இருந்துச்சு. முன்ன மஞ்சள் நிறத்தில இருந்தது எல்லாம் இப்ப சிகப்பு நிறம். ஐய்யோன்னு ஆயிடுச்சு மக்களுக்கு. ஆனாலும் கீக்கீ மட்டும் அதே பச்சை நிறத்தில இருந்துச்சாம். அவங்க ஊரை தாண்டி இப்ப அந்த மாவட்டத்தில பிரபலம் ஆகிடுச்சு. அதனால் மாவட்ட தலைநகருக்கு கீக்கீயை கூட்டிகிட்டு போயிட்டாங்க. கலெக்டர் ஆபிசில கீக்கீயை வெச்சிட்டாங்க. அந்த மாவட்டத்தில இருக்கிற மக்கள் வந்து பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. கீக்கீ ஒரு கண்காட்சி பொருளா மாறிடுச்சு. ஆச்சரியமா பார்த்தாங்க. ரம்யா தான் கீக்கீ இல்லாம ரொம்ப வாடிட்டா. கீக்கியும் ரம்யாவை பார்க்காம ரொம்ப வருத்தமா இருந்துச்சு.

இன்னும் ஒரு வாரம் கழிச்சு உலகம் ஊதா நிறத்துக்கு மாறிடுச்சு. மாவட்ட தலைநகரில் இருந்த நம்ம கேக்கி இப்ப மாநில தலைநகர் சென்னைக்கு மாறிடுச்சு. முதலமைச்சர் கூட வந்து பார்த்துட்டு போனாங்க. அடுத்த வாரம் நீல நிறத்துக்கு மாறிடுச்சு. எல்லா டீவி சேனல்லையும் நம்ம கீக்கீ பிரபலம் ஆயாச்சு. இப்ப கீக்கீ இருக்கிறது டெல்லியில. விமானம் பிடிச்சு எல்லா கீக்கீயை பார்க்க மக்கள் வந்து போனாங்க. நாள் முழுக்க வரிசையில் நின்னு பார்த்துட்டு எல்லாம் போனாங்க. 24 மணி நேரமும் கீக்கியை பார்த்தாங்க. செய்தி தாளில் எல்லாம் தினமும் கீக்கீ படம் வந்துடும்.

இங்க ஊர்ல ரம்யா சாப்பிடறதே இல்லை. கீக்கீ வேணும்னு அழ ஆரம்பிச்சி இருந்தா. டீவில கீக்கீயை பார்த்து கொஞ்சம் சமாதானம் அடைஞ்சா. ஒரு இரவு முழுக்க அழுதிட்டே இருந்தா. அழுதுட்டே தூங்கிட்டு இருந்தா. காலையில ஒரு குரல் கேட்டுச்சு. ‘ரம்யா... ரம்யா’ன்னு. பழக்கப்பட்ட குரல் ஆனா அம்மா அப்பா குரல் இல்ல, பின்ன யாருடையது? ஆஹா நம்ம கீக்கீயோட குரல் தான் அது. கீக்கீ கூண்டில் இல்லாம ரம்யா பக்கத்தில நின்னுகிட்டு இருந்துச்சு.

வெளிய எட்டிப்பார்த்தா உலகம் பச்சை நிறத்துக்கு மாறி இருந்தது. கீக்கியும் பச்சை நிறத்தில இருந்ததால அதுக்கு இனி கவனம் இல்லை. அதனால் ரம்யாவோட வீட்டில் வந்து விட்டுட்டாங்க. இனி உலகம் எந்த நிறத்தில இருந்தா என்ன ரெண்டு நண்பர்கள் ஒன்னு சேர்ந்துட்டாங்க. இனி அவங்களுக்கு கொண்டாட்டம் தான்.

நாளைக்கு காலையில சீக்கிரம் எழுந்து உலகம் அதே மாதிரி தான் இருக்கான்னு சரிபார்த்துக்கோங்க. சரியா?

(ஒரு சர்வதேச நாடோடிக்கதையை தழுவியது)



No comments:

Post a Comment