Friday, August 28, 2015

யார் வென்றது


அன்றைய விளையாட்டு போட்டிகளில் கடைசிப் போட்டி ஓட்டப்பந்தையம். காடுகளில் விலங்குகளுக்கு இடையே நடக்கும் விளையாட்டு போட்டிகள். ஓட்டபந்தையத்திற்கு குல்பி என்கின்ற யானை, முயல், ஆமை, மான்கள் இரண்டு, காண்டாமிருகம்,  மனிதக்குரங்கு என எல்லா போட்டியாளர்களும் ஓடுகளத்தில் தயாராக இருந்தார்கள். போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சள் சட்டைபோட்ட அந்த கரடியார் தான். ஒலிப்பெருக்கியில் “நண்பர்களே, இதோ இந்த விளையாட்டு தினத்தின் கடைசிப் போட்டி. வடக்கு பகுதி காடும் தெற்கு பகுதி காடும் சரிசமமாக வென்று இருக்கின்றார்கள். இந்த ஓட்டப்பந்தயத்தில் யார் வெற்றி பெறுகின்றார்களோ அதை பொறுத்தே எந்த காட்டுப்பகுதி வெல்லப்போகின்றார்கள் என முடிவாகும். அனைவரும் போட்டியை காண தயாரா?” எனக் கேட்டது.  

கரடியார் எப்போது ஓட ஆரம்பிக்க வேண்டும் என்று போட்டியாளர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார். “ஒன்று” “இரண்டு” “மூன்று” என சொல்லிவிட்டு விசில் ஊதுவேன் பிறகு எல்லோரும் ஓடவேண்டும். எந்த வழியாக ஓட வேண்டும் என்று இதோ இந்த அம்புகுறிகள் வழிகாட்டும். தூரத்தில் தெரியும் அந்த மரங்களை சுற்றிவிட்டு திரும்ப இதே வழியாக வரவேண்டும். யார் முதலில் இந்த கோட்டினை தொடுகின்றார்களோ அவர்களே வெற்றிபெற்றவர்.” எல்லா மிருகமும் தயார் நிலையில் இருந்தார்கள். “ஒன்று இரண்டு…” என சொல்வதற்குள் ஒரு மான் துள்ளி ஓடியது. மூன்று முறை இதே போலச் செய்தது. நான்காவது முறையும் அப்படி செய்ததால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டது. “ஒன்று..இரண்டு..மூன்று” விசில் ஊதப்பட்டது. எல்லா போட்டியாளர்களும் ஓட ஆரம்பித்துவிட்டார்கள்.

குல்பி என்கின்ற யானை தான் எல்லோருக்கும் முன்னே சென்றது. குல்பி ஒரு ஓட்டப்பந்தைய வீரர்.ஆமையும் வேகமாவே சென்றது. முயல், மான், மனிதக்குரங்கு இவை அனைத்தும் அந்த யானையை முந்தி செல்ல போட்டி போட்டன. ஓயாத விசில் சத்தம். மஞ்ச சட்டை கரடியாரில் விசில் சத்தமில்லை இது பார்வையாளார்களின் விசில் சத்தம். காட்டில் வசித்த சின்ன சின்ன விலங்குகளும் பறவைகளும் மரத்தில் இருந்து போட்டியை பார்த்தன.  

விளையாட்டு திடலில் இருந்து வெளியே இருக்கும் அந்த மரங்களை சுற்றிவர வேண்டும். குல்பி யானை தான் முதலில் சென்றது. அங்கே தான் அந்த விபரீதம் நடந்தது. குல்பி யானை வடக்கு பகுதியை சேர்ந்தது. குல்பி தான் வெற்றி பெறும் என ஏற்கனவே கணித்த தெற்கு பகுதி நரிகள் ஒன்றாக கூடி திட்டமிட்டன. கண்ணுக்கு தெரியாத அளவிற்கு ஒரு மெல்லிய கயிறை தயார் செய்து குல்பிக்கு முன்னார் கட்டிவிடலாம். குல்பி கீழே விழுந்ததும் மற்ற மிருகங்கள் வேகமாக ஓடி வெற்றி பெறும். இது தான் திட்டம். அதன்படியே கயிறும் கட்டப்பட்டது. குல்பியும் கயிறு அருகே ஓடிவந்தது.  

தமால் என்ற சத்தம். குல்பி விழுந்துவிட்டது. பின்னால் ஓடிவந்த போட்டியாளார்கள் இன்னும் வேகமெடுத்தனர். திட்டமிட்ட நரிகள் மகிழ்ந்தனர். ஆனால் அங்கே தான் ஒரு திருப்பம். ஓடி வந்த போட்டியாளர்கள் குல்பிக்கு அருகே நின்றனர். பதறினார்கள். “அய்யோ குல்பி எழுந்திடுங்க எழுந்திடுங்க” என்றது ஆமை. தன் கழுத்தில் மாட்டி இருந்த தண்ணீர் பாட்டிலை குல்பிக்கு கொடுத்தது முயல். குடிங்க குடிங்க குடிச்சிட்டு பேசுங்க என்றது. முதலில் எழுந்து அமர்ந்தது குல்பி. அதற்குள் மனிதக்குரங்கும் மானும் ஒரு பெரிய குச்சியை எடுத்து வந்தனர். யானையை எழுப்புவது சிரமம் என அவர்களுக்கு தெரியும். குச்சி உதவக்கூடும் என நினைத்தார்கள். எல்லோரும் குச்சியை பிடித்துக்கொண்டனர். குல்பி மெல்ல எழுந்தது.  நின்றது. “காலை உதறிவிடுங்க யானையாரே” என்றது மான். “கீழ விழுந்து எழுந்தா எங்கம்மா அப்படித்தான் சொல்லுவாங்க”. காலை உதறியது குல்பி.  

இந்த காட்சிகள் எதுவும் பார்வையாளர்களுக்கு தெரியவில்லை. அந்த மரங்களுக்கு பின்னாடி நடந்தது. கைத்தட்டியபடியே யார் திரும்ப விளையாட்டு திடலுக்கு முதலில் வருவார்கள் என ஆவலுடன் இருந்தார்கள். அதோ குல்பியின் உருவம் தெரிகின்றது. நினைத்தது போலவே குல்பி தான் முதலில் வருகின்றது என வடக்கு பகுதி விலங்குகள் குஷியில் குதித்தன. ஆனால் குல்பியின் உருவம் அருகே வர வரத்தான் உண்மை எல்லோருக்கும் புரிந்தது.  

ஆமாம் குல்பி மட்டும் வரவில்லை. டாங்குடிங்கா டங்கா டாங்குடிங்கா டங்கா என பாட்டுக்கு நடனமாடியபடி குல்பி வந்தது. குல்பியின் முதுகில் மற்ற போட்டியாளர்கள் அமர்ந்து இருந்தனர். ஆமைக்கு மேலே முயல். கையை உயர்த்தி உயர்த்தி பஞ்சாபி நடனமத்தை போல மனிதகுரங்கு முதுகில் அமர்ந்து வந்தது. மான் முதுகில் ஏற முடியாததால் தும்பிக்கையில் பிடித்து வந்து. இந்த காட்சியை பார்த்ததும் அந்த திடலே எழுந்து நின்றது. காடே உற்சாகத்தில் அதிர்ந்தது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கைத்தட்டி விசில் அடித்தனர். சிறப்பு விருந்தினர்கள் மேடையில் இருந்தே இறங்கி முடிவு கோட்டிற்கு வந்தார்கள். குல்பியை எல்லோரும் பாராட்டினார்கள். நடந்ததையும் விளக்கினார்கள். நரிகள் அங்கு வந்து சேர்ந்தன. நடந்த தவறுக்கு அவர்கள் தான் காரணம் என சொல்லி எல்லோர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்டன. ஒலிப்பெருக்கியில் உற்சாக குரல் “ஆஹா ஆஹா என்ன அற்புதம்,  போட்டி நிறைவு பெற்றது. எல்லோருக்கும் என்ன ஒரு மகிழ்ச்சி. எல்லோரும் வெற்றி பெற்றுள்ளோம். மிக்க நன்றி நண்பர்களே. அடுத்த விளையாட்டு தினத்தில் சந்திப்போம்” எனக் ஒலித்தது. போட்டி முடிந்தது என எல்லோரும் தங்கள் வீட்டிற்கு கிளம்ப ஆரம்பித்தார்கள்.  

அப்போது தான் அந்த சத்தம் கேட்டது. டன் டன் டன் டன். அடடே எல்லோருமே போட்டியில் கலந்துகொண்ட காண்டாமிருகத்தை மறந்தே விட்டோமே. இதோ அந்த மரங்கள் நிறைந்த பகுதியை கடந்தவிட்டு மீண்டும் விளையாட்டு திடலுக்கு வந்துவிட்டது. விளையாட்டு திடலே உறைந்தது. அவரவர் அப்படியே நின்றனர். ச்ச இவரை மறந்தே போய்விட்டோமே என நினைத்தது குல்பி. டன் டன் டன் டன். வலுவாக திடமாக நடந்துவந்தது காண்டமிருகம். அது ஒரு ராஜநடை.வீரநடை.  

மீண்டும் ஒலிப்பெருக்கியில் குரல் “நண்பர்களே நண்பர்களே, என் குரல் தழுதழுக்கின்றது. ஒரு போட்டியில் வெற்றி தோல்வி முக்கியமல்ல பங்கேற்பதே முக்கியம் என தன் வீர நடையால் எல்லோருக்கும் புரியவைத்துள்ளது காண்டாமிருகம். கைத்தட்டி உற்சாகப்படுத்துவோம்”.

  டன் டன் டன் டன். கைத்தட்டலும் விசிலும் சுத்துப்பட்டி 18 காட்டிற்கும் கேட்டது.



No comments:

Post a Comment