Friday, August 28, 2015

மயிலிறகு குட்டி போடுமா?


அப்பாவின் நண்பருடைய தோட்டத்திற்கு சென்ற போது அங்கே மயில் ஒன்றினை பார்த்தாள் ஓவியா. மழை வருவது மாதிரி போல இருந்த சமயம் மயில் தோகையை விரித்தது. மயிலை இன்னும் பிடித்துவிட்டது. வீட்டிற்கு வரும்போது மயில் இறகு ஒன்றினை எடுத்துவந்தாள். பள்ளிக்கு சென்று தன் தோழிகளிடம் காட்டினாள். எல்லோருக்கும் ஓவியாவைப் பார்த்து பொறாமை வந்தது. “ஏ ஓவியா, இதை நோட்டுல வெச்சிக்க மயிலிறகு குட்டிபோடும். அந்த குட்டிய எனக்கு தருவியா?” என அவளது உற்ற தோழி ப்ரீதா கேட்டாள். அதன்படியே நோட்டு நடுவில் மயிலிறகை வைத்தாள். குட்டி போடுமா குட்டி போடுமா எனப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மாலை அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தாள் எத்தனை நாளில் குட்டி போடும் என கேட்டாள். விளையாட்டின் நடுவே ஓடிவந்து ஓடிவந்து நோட்டினை பார்த்தாள். இரவு படுக்க போகும் முன்னர் பார்த்தாள். நடு இரவு எழுந்து பார்த்தாள். மறுநாள் பள்ளிக்கு செல்லும்போது பார்த்தாள். எந்த மாற்றமும் இருக்கவில்லை. ஒரே ஒரு மயிலிறகு மட்டும் தான் இருந்தது. “வீட்லயே நோட்டை விட்டுட்டு போ ஓவியா, குட்டி போடுதான்னு நான் பார்க்கிறேன்” என்றார் ஓவியா அம்மா.

அன்றைய தினம் அவள் பள்ளியில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மயிலிறகை நோட்டுகளில் வரைந்தாள். மாலை பள்ளியில் இருந்து வந்ததும் நேராக நோட்டினை திறந்தாள். இரண்டு குட்டி போட்டிருந்தது மயிலிறகு. ஓவியாவிற்கு ரெட்டை சந்தோஷம். இப்ப அவளுடைய கவலை ஒரு இறகை ப்ரீதாவிற்கு தந்துவிடலாம் மற்றொன்று யாருக்கு என்பதே ! உங்களுக்கு வேணுமா?



No comments:

Post a Comment