Friday, August 28, 2015

மாமழை


இன்றோடு மழை பெய்ய ஆரம்பித்து துவங்கி ஐந்து வருடங்கள் ஆகின்றது. ஆமாம் ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக ஒரு நிமிடம் கூட நிற்காமல் மழை. சூடாமணி வீட்டில் இன்று கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடினார்கள். மழைக்காக அல்ல. சூடாமணி பிறந்ததும் சரியாக மழை துவங்கிய இந்நாளில் தான். சூடாமணி இதுவரை வெய்யிலையே பார்த்ததில்லை.  

மழை துவங்கிய முதல் நாள் எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள், இரண்டாவது நாள் சந்தோஷம் குறைந்தது, ஒரு வாரத்தில் பயப்பட ஆரம்பித்தார்கள். ஊரெல்லாம் தண்ணீர், சாலையெல்லாம் தண்ணீர், மைதானங்களில் தண்ணீர். கார், பஸ், லாரி, சைக்கிள், ஸ்குட்டர் என எந்த வாகனமும் வெளியே வரவில்லை. கொஞ்ச நாட்களில் அவைகளை அடுத்த ஊருக்கு எடுத்து சென்றுவிட்டனர். நீரை கடலுக்குள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஊர் முழுக்க சின்ன சின்ன படகுகள் தான். அதில் தான் மக்கள் வெளியே சென்று வந்தனர். பக்கத்து ஊரில் இருந்து தான் உணவுப்பொருட்கள் வந்தன. சில நாட்களில் மழை வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.  

சூடாமணியின் ஐந்தாவது பிறந்தநாளுக்கு முந்தைய நாள் அன்று தான் அந்த செய்தியை வானொலி அறிவித்தது. செய்தித்தாள்கள் இந்த ஊருக்கு வந்து ஐந்து வருடமாகிவிட்டது. செய்திகளை கேட்க வானொலி மட்டும் தான். “ஊர் மக்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி, நாளையும் நாளை மறுநாளும் மழை பெய்யாது. வெயில் காய இருப்பதினால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.”  

அந்த இரவு ஊரே தூங்கவில்லை. சூரியனை பார்க்க ஆவலாக இருந்தனர். மழை பெய்துகொண்டே இருப்பததினால் ஊரே எப்போதும் கொஞ்சம் இருட்டாக தான் இருக்கும். காலை 5 மணி வரை மழைவிட்டபாடில்லை. 5.30க்கு தூறலாக மாறியது. 6 மணிக்கு மழை நின்றது. சூரியன் ஐந்து வருடங்களுக்கு பிறகு எட்டுப்பார்த்தது. சூடாமணி முதல்முறையாக சூரியனை நேரில் பார்க்கின்றாள். அவளுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

”அப்பா, என்னை சைக்கிளில் வெளிய கூட்டிகிட்டு போறீங்களா?” என்றாள் சூடாமணி. பரண்மேல் இருந்த சைக்கிளை கீழே இறக்கினார் அப்பா. மழை நின்றதுமே சாலையில் கொஞ்ச நேரத்திலேயே தண்ணீர் காணாமல் போனது. சூடாமணி மண்ணையும் முதன்முதலாக பார்க்கின்றாள். மின்சாரம் நிறைய தரமுடியாததால் வீடுகளில் கணினி, தொலைக்காட்சி பெட்டிகள் பயன்படுத்த முடியவில்லை. சில புத்தகங்களில் மண்னை பார்த்திருக்கின்றாள். அவ்வளவே.  

சைக்கிளின் முன் கம்பியில் சூடாமணி அமர, அப்பா வண்டியை ஓட்டினார். பலவருடங்கள் கழித்து சைக்கிளை எடுத்ததால் கடக்முடக் கடக்முடக் என ஓடியது. நல்லவேளை காற்றடிக்கும் பம்பு இருந்ததால் காற்றடித்துக்கொண்டார்கள்.

  காற்று ஜிலுஜிலுவென அடித்தது. காற்றில் இன்னும் ஈரப்பதம் குறையவே இல்லை. சாலையில் யாருமே இல்லை. ஆனால் எல்லோரும் வீட்டு வெளியே நின்றுகொண்டு வானத்தையும் சூரியனையும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வழக்கமாக தாமதமாக எழுந்துகொள்ளும் சிறுவர்கள் எல்லாம் சீக்கிரமே எழுந்து மாடியில் நின்றுகொண்டிருந்தார்கள்.

  கண்ணைமூடி கைகளை அகல விரித்தாள் சூடாமணி. அப்பா இன்னும் வேகம் எடுத்தார். சர்ர்ர் என்று பிரதான சாலைக்கு சைக்கிள் சென்றது.

“அப்பா”

“சொல்லுமா”

“இப்ப மழை வந்தா நல்லா இருக்குமில்லை”



No comments:

Post a Comment