Friday, August 28, 2015

தொலைந்த மூக்கு


பரத் - நந்தினி இருவரும் அண்ணன் தங்கை. வழக்கம்போல இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் இருக்கானே அவன் மகா குறும்பன். அவன் இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை. சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் தான் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் ஐந்து மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் வசிக்கின்றார்கள்.

அது ஒரு சனிக்கிழமை காலை. அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றுவிட்டனர். பின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார்.

“பரத், இங்க வா. நந்துவை சீண்டாமல் விளையாடனும். சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்திட்ரேன்”

“சரிங்க தாத்தா” - என இருவரும் கூறினர்.

விளையாட்டுச் சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாட துவங்கினர். எந்த பொருளை பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் “உஷ் உஷ்” என்று கத்தியபடி ஓடினான்.

“அண்ணா என்ன ஆச்சு?” பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..

“ஒரு பருந்து வந்தது பார்த்தியா?”

“இல்லையே”

“பெரிய பருந்து”

”அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிட்டு போனீங்க?”

“அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துகிட்டு போயிடுச்சு. அது தான் துரத்திகிட்டு ஓடினேன். ஆனா அதுக்குள்ள பறந்தே போயிடுச்சு”..

இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்.."அம்மா என் மூக்கு..என் மூக்கு.. ” என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள். கையையும் காலையும் உதைத்தாள். பக்கத்துவீட்டு அம்மா வந்தும் அடங்கவில்லை. சிரித்துக்கொண்டே அவரும் போய்விட்டார்.

தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். “என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் இப்படி அழுது?” என்று பதட்டமுடன் கேட்டார்

தன் அழுகையை நிறுத்தி “தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக்கிட்டு இருந்தோமா.ஒரு பெரிய பருந்து கறுப்பு கலர்ல வந்துச்சா. என் மூக்கை..” மீண்டும் அழுகை..

“அழாமல் சொன்னால் தானே புரியும் நந்து”

“என் மூக்கை கடிச்சி எடுத்துட்டு போயிடுச்சு தாத்தா....ம்ம்ம்..ம்ம்ம்”

நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. “ஓ உன் மூக்கு தானா அது? ” என்றார்.

அதுவரையில் அடங்காமல் அழுதுகொண்டிருந்த நந்தினி அமைதியானாள். “நான் தெருவில் வந்தப்ப ஒரு பருந்து வந்து என்கிட்ட பேசுச்சு. ஒரு அழகான குட்டி பொண்ணுடைய மூக்கை எடுத்துகிட்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண்ன்னு சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்திட்டு பறந்து போயிடுச்சு”

“இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வெச்சிருக்கேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கோ..”

பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார். ‘ஜெய் ஜம்போலி’  - ஒரு மந்திரம் சொன்னார்.

“ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்.” நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்..”படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாத்துற” என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா..

“ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு..ஜாலி ஜாலி..” மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.



No comments:

Post a Comment