Friday, August 28, 2015

இளநெஞ்சம்


அது ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட். அந்த கட்டிடத்தில நிறையப் பால்கனி இருந்துச்சாம். அதுல ஒரு பால்கனி மேல ரெண்டு புறா கூடு கட்டுச்சாம். கூடு கட்டி அதுல ரெண்டு முட்டையும் போட்டுச்சாம். ஒரு அப்பா புறா ஒரு அம்மா புறா. சீக்கிரமே ரெண்டு குட்டிப்புறாக்கள் வரப்போகுதுன்னு ரொம்ப சந்தோசமா இருந்துச்சாம். அவங்களுக்கு என்ன பெயர் வெக்கலாம்னு தினமும் ரெண்டு பேரும் பேசி பேசி ரெண்டு பேருக்கும் சண்டையே வந்திடுமாம். ஆனால் ஒரு நாள் ரெண்டு பேரும் சாப்பாடு தேட வெளிய போனப்ப ஏதோ ஒரு பெரிய பறவை வந்து அந்தக் கூட்டுல இருந்த ஒரு முட்டையை உடைச்சிட்டுப் போயிடுச்சாம். ரெண்டு புறாவும் ரொம்ப வருத்தப்பட்டுச்சாம். இருக்கிற ஒரு முட்டையை எப்படியாச்சும் பாதுகாக்கணும்னு முடிவு செய்தாங்களாம். அதுக்கப்புறம் அப்பா புறா கூட்டிலயே இருந்து முட்டையைப் பாதுகாத்துச்சாம். அம்மா புறா சாப்பாடு ஏதாச்சும் எடுத்துகிட்டு வருமாம். அழகான குட்டிப்புறாவும் பொறந்துடுச்சாம். ஆனா அந்தப் பால்கனியில அவங்க இருந்த இடத்தில கட்டை எல்லாம் வெச்சி அடைச்சிட்டாங்கலாம். யாரோ அந்த வீட்டுக்காரங்ககிட்ட புறா வீட்ல இருந்தா கெடுதல்னு சொல்லி இருக்காங்க. பாவம் புறாக்கள் மூனும்.

திரும்ப இன்னொரு பால்கனியில கூடு கட்டினாங்களாம். அங்கயும் ரெண்டு முட்டை போட்டுச்சாம். ஆனால் இந்த முறை ரெண்டு முட்டையும் உடைஞ்சிடுச்சாம். அங்கயும் கட்டை வெச்சிட்டாங்களாம். எங்க போறதுன்னு தெரியாம யாருக்கும் தெரியாம ஒரு சின்ன திட்டுல மூனு பேரும் வாழ்ந்துட்டு வந்தாங்களாம்.

அதே வீட்டில ரஞ்சனான்னு ஒரு குட்டிப் பொண்ணும் இருந்தாளாம். முதலாம் வகுப்புத் தேர்வு முடிஞ்சு விடுமுறை விட்டிருந்தாங்களாம். அவ ஒரு நாள் வாசல்ல உட்கார்ந்துகிட்டு வண்ணம் தீட்டிக்கொண்டு இருந்தாளாம். வெயில் நிறைய வந்துட்டதால வெளிய போய் விளையாட முடியல. அவங்க அப்பா ஒரு பெயிண்ட் பிரஷ்ஷும் கலர்ஸும் வாங்கிக் கொடுத்து இருந்தாராம். என்ன வரையலாம்னு யோசனையா இருந்தாளாம் ரஞ்சனா. ‘நீ அழகா வரைஞ்சி கொடுத்தா ஏதாச்சும் பத்திரிக்கைக்கு அனுப்பி உன் பேரு போட்டோ எல்லாம் போட வெக்கறேன்’ன்னு சொல்லிட்டு அலுவலகம் போயிட்டாராம் அவங்க அப்பா. அவங்க அம்மாவும் குட்டி பாப்பாவுக்கு சாப்பிட பலகாரம் செய்ய சமையல் அறையில இருந்தாங்களாம். அன்னைக்கு மாலை ரஞ்சனாவை பார்க்க ஊரில் இருந்து அவளுடைய உறவினர்கள் வருவதாக இருந்துச்சு.

இன்னும் என்ன வரையறதுன்னு ரஞ்சனாவிற்கு யோசனையே வரல. அப்ப அந்தக் குட்டிப்புறா (மொதல்ல பொறந்தது இல்லையா) தத்தி தத்தி ரஞ்சனா கிட்ட வந்துச்சாம். முதல்ல ரஞ்சனா பயந்துட்டாளாம். அப்புறம் அந்தக் குட்டிப்புறா பேச ஆரம்பிச்சுதாம். “நீ ரஞ்சனா தானே. நான் உன் பேர கேட்டிருக்கேன். என்னை நீ பார்த்திருக்கியா? பயப்படதா ரஞ்சனா. என் பேரு குட்டிப்புறா.”

புறா பேசுதேன்னு ரஞ்சனாவிற்கு ஆச்சர்யம். “நீ எங்கயும் வெளிய போகலையா?”

“இல்லை ரஞ்சனா. ரொம்ப வெயிலா இருக்கில்லையா அதனால அப்பா அம்மா என்னை கூட்டிகிட்டு போகல”ன்னு புறா சொல்லுச்சாம்

“நீங்க ஏன் எங்க வீட்டிகிட்டயே இருக்கீங்க. உங்கள துரத்த இங்க நிறையத் திட்டம் போட்றாங்க. எங்காச்சும் போயிடலாம் இல்ல” என்றாளாம்.

அதற்குக் கொஞ்ச நேரம் யோசிச்சு குட்டிப்புறா சொன்னதாம் “ரஞ்சனா, இதோ இதே இடத்தில தான் சில வருஷங்க முன்னாடி எங்க தாத்தா, அவங்க தாத்தா எல்லாம் ஒரு மரத்தில வாழ்ந்து வந்தாங்களாம். அப்புறம் மரத்தை வெட்டிட்டு இங்க இந்தக் கட்டிடம் கட்டிட்டாங்க. எப்ப அப்பாவுக்கு இங்க இருந்தா தான் தூக்கம் வருதாம். எங்க தாத்தா பாட்டி தாலாட்டுற மாதிரி இருக்காம். எனக்கும் அப்படிதான் தோணுது. இது எங்க எடம்பா”

ரஞ்சனாவிற்கு என்ன சொல்றதுன்னு புரியல. சின்னப்பெண் தானே. “சரி எனக்குக் கொஞ்சம் தண்ணியும் அரிசியும் தருவியா? ரொம்பத் தாகமா இருக்குப்பா. வெளியவும் போக முடியல. பக்கத்தில எங்க தண்ணியும் இல்லை. ஏரி குளம் எல்லாம் தூரமா இருக்கு, அதுலயும் தண்ணியே இல்லைப்பா..” பாவமா சொல்லுச்சாம் குட்டிப்புறா.

கொஞ்ச யோசிச்ச ரஞ்சனா, உள்ள போய் ஒரு அகலமான வாய் வெச்ச பாத்திரத்தில தண்ணீரையும் கைப்பிடி அளவு அரிசி எடுத்துகிட்டு வந்தா. குட்டிப்புறாவோட கூண்டுக்கு பக்கத்தில அதை வெச்சிட்டான். “இனி உனக்குத் தினமும் தண்ணி வெக்கறேன். நாம ரெண்டு பேரும் நண்பர்கள். சரியா? ” சரி என்பது போலத் தலையாட்டியது குட்டிப்புறா.

ரஞ்சனா தண்ணீர் குடிக்க உள்ளே சென்றபோது குட்டிப்புறா தன் கால்களை வண்ணங்களை வைத்துப் பேப்பரில் அழகிய ஓவியம் வரைந்துவிட்டு தன் கூட்டிற்குப் பறந்துபோனது. அவ்வளவு அழகாக இருந்த அந்த ஓவியத்தை அவளுடைய நண்பர்கள் உறவினர்களிடம் காட்டி தன்னுடைய நண்பன் வரைந்தது என மகிழ்ந்தாள். யாருமே யாரந்த நண்பன் என கேட்கவே இல்லை.



No comments:

Post a Comment