Friday, August 28, 2015

மாறாவின் விசித்திர சேவை


அழுதுகொண்டிருந்த எறும்பிடம் என்ன விஷயம் என விசாரித்தது தும்பி. “தம்பி, ஏன் அழுவுற?” என்றது. தும்பியின் பெயர் மாறா. அழுதுகொண்டிருந்த எறும்பின் பெயர் அல்லி. ”நானு..நானு வேகமா அடிச்ச காத்துல பறந்து வந்துட்டேன். ஒரு காய்ந்த இலை மேல இருந்தேனா அப்ப வேகமா காத்து அடிச்சுது அதனால அப்படியே வந்துட்டேன். எனக்கு எங்க வீட்டுக்கு போகனும்..ம்ம்ம்” என சொல்லிச் சொல்லி அழுதது அல்லி. “அவ்வளவு தானே, உன் வீடு எங்க இருக்குன்னு சொல்லு நானே உன்னை விட்டுட்றேன்” என்றது மாறா.

“எங்க வீடு அங்க இருக்கு” – இது அல்லி. சரி எறும்பிற்கு இடம் தெரியவில்லை என மாறாவிற்கு புரிந்தது. “சரி உங்க வீடு எப்படி இருக்கும்?” என்றது. அதற்கும் “எங்க வீடு எங்க வீடு மாதிரி அழகா இருக்கும்” என்றது மல்லி. ரொம்ப குட்டி எறும்பு அதனால் அதற்கு எதுவும் தெரியவில்லை. சரி முதுகில் ஏறிக்கோ எப்படியும் ரொம்ப தூரம் வந்திருக்க முடியாது என அல்லியை முதுகில் ஏற்றிக்கொண்டது.

மாறாவை கெட்டியாக பிடித்துக்கொண்டது அல்லி. மாறா ஒவ்வொரு வீடாகச் சென்றது. வீட்டிற்குள் அல்ல தெருவிலேயே தான் சென்றது. “இதுவா?..” ”இதுவா” என விசாரித்தபடி பறந்தது மாறா. “அதோ அந்த வண்ணத்தில தான் வீடு இருக்கும்” . அது காட்டிய வண்ணம் மஞ்சள். அதன் பிறகு மஞ்சள் வீட்டின் வாசலில் மற்றும் நின்றது. இல்லை இல்லை என்றது. திடீரென்று அதோ அது மாதிரி மரத்துக்கு கீழே தான் இருக்கும் என்றது. அது தென்னை மரம்.

சில வீடுகள் தள்ளி ஒரு வீட்டை கடக்கும்போது “இது தான் இது தான். இந்த மரத்துக்கு கீழ தான் எங்க வீடு” என்றது மல்லி. சர்ர்ர் என நின்று மரத்தை நோக்கி பறந்தது மாறா. “மாறா அண்ணா, எனக்கு பசிக்குது, காலையில இருந்து சாப்பிடவே இல்லை. வீட்டுக்குள்ள சமையலறையில ஒரு சக்கரை டப்பா இருக்கு அங்க போய் கொஞ்ச சாப்பிட்டு அப்படியே கொஞ்சம் சக்கரையையும் வீட்டுக்கு எடுத்துட்டு போலாமா? நாங்க வீட்ல இருந்து அந்த டப்பாவுக்கு போகவே அறை நாள் ஆகிடும். உங்க கூட போனா சீக்கிரம் போயிடலாம்” என விண்ணப்பம் போட்டது அல்லி. சிரித்தபடி வீட்டிற்குள் சென்றது மாறா. திசையை சொல்லச் சொல்ல மாறா அந்த டப்பாவின் மேலே நின்றது. டப்பா நல்ல உயரத்தில் இருந்தது. அல்லி சக்கரையை பார்த்ததும் புரண்டு விளையாடியது. மற்ற எறும்பகளோடு வரும்போது விளையாட நேரம் இருக்காது, வந்ததும் வேலை முடித்துக்கொண்டு சரசரவென போய்விட வேண்டும். அது தான் விதிமுறை.

இப்படி விளையாடிக்கொண்டிருந்த அல்லிக்கு கீழே நடப்பது தெரியவில்லை. சமையலறை திட்டில் அமர்ந்திருந்த மாறாவை அந்த வீட்டு சிறுவன் பிடித்துவிட்டான். துன்புறுத்த ஆரம்பித்துவிட்டான். சிறிது நேரம் கழித்து இந்த காட்சியை பார்த்த அல்லி என்ன செய்வது என புரியாமல் திகைத்தது. அங்கிருந்து ஒரு குதி. நேராக மாறாவை பிடித்திருந்த சிறுவனின் கைமேல் அமர்ந்தது. வெடுக் என ஒரு கடி. “அம்மா ..” என அலறிபடி மாறாவை விட்டுவிட்டான். கையை உதறினான் அவன் உதறியதில் அல்லியும் பறந்தது. அல்லி கீழே விழும் முன்னர் சொயிங் என பறந்து முதுகில் பிடித்தது மாறா.

அதன்பின்னர் நேராக அல்லியின் வீட்டிற்கு சென்றனர். வழியின் “அண்ணா, அந்த பையனுக்கு வலிக்குமா? பாவம் இல்லை” என்றது. “கொஞ்ச நேரத்தில சரியாகிடும் அல்லி” என்றது மாறாம். வீடு வந்தது. அங்கே ஆயிரக்கணக்கில் எறும்புகள். அல்லி காணாமல் போனதால் அதன் நண்பர்கள் வருத்தத்தில் இருந்தனர். ஒருமுறை காணவில்லை என்றால் திரும்ப கிடைக்கமாட்டார்கள். ஏதாவது ஆபத்து வந்துவிட்டிருக்கும். டாங்சிக்கு டாங்கிக்கு என அழகு நடை நடத்து வீட்டிற்குள் நுழைந்தது அல்லி. அங்கே சோகமாக இருந்த வீடு குதுகலமானது. விசில் பறந்தது. கடகடவென மாறாவுடன் வீடு வந்த கதையை அனைவருக்கும் கூறியது. எல்லோரும் வீட்டைவிட்டு வெளியே வந்து மாறாவிற்கு நன்றி தெரிவித்தனர். அல்லி வானத்தில் பறந்த அனுபவத்தை கேட்ட அதன் இரண்டு நண்பர்கள் “மாறா அண்ணா எங்க ரெண்டு பேரையும் இந்த மரத்தோட உச்சி வரைக்கும் கூட்டிகிட்டு போய் கீழ கொண்டு வர்ரீங்களா?” என்றன. மகிழ்ச்சியுடன் உஸ்ஸ்ஸ் என மேல அழைத்து சென்றது. இரண்டு எறும்புகளுக்கும் அவ்வளவு ஆனந்தம். கீழே மெதுவாக வந்த மாறாவிற்கு அதிர்ச்சி.

இரண்டு இரண்டு எறும்புகளாக சீரான வரிசையில் நின்று கொண்டிருந்தன எறும்புகள். “எங்களையும் ஒரு சுற்று கூட்டிகிட்டு போங்க மாறா அண்ணா” என்றன ஒருமித்த குரலில்.



No comments:

Post a Comment