Friday, August 28, 2015

அரவிந்தின் குட்டித் தோழன்


அரவிந்த் தினமும் காலையில் மொட்டை மாடியில் தான் படிப்பான். வழக்கம் போல ஒரு நாள் காலை, மாடிக்கு சென்றபோது புதிதாக ஏதோ பொருள் இருப்பதை கவனித்தான். அந்தப் பொருள் லேசாக அசைவதை கண்டான். அதன் அருகே சென்று பார்த்த போது அது அணில் போல தெரிந்தது. எங்கேயோ அடிபட்டு விழுந்து இருந்தது. மிகவும் மென்மையாக இருந்ததால் அதனை எடுக்க கொஞ்சம் தயங்கினான் அரவிந்த். எடுத்தாலும் எங்கே வைப்பது என்ற சந்தேகம் வேறு. மென்மையாக இருந்த அந்த உயிரை மிகவும் மென்மையான இடத்தில் வைக்க வேண்டும் அல்லவா. எதிலே வைப்பது?

சில நாட்கள் முன்னர் அரவிந்திற்கு விளையாடும்போது அடிபட்டது. அப்போது அவனது காயத்திற்கு மருந்திட நிறைய பஞ்சினை அவன் அப்பா வாங்கி வந்திருந்தார். சரி, அந்த பஞ்சினை படுக்கைபோல செய்து அதன் மீது பழைய துணிபோட்டு அதன் மீது அணிலை வைக்கலாம் என முடிவு செய்தான். கீழே சென்றே பஞ்சினையும் கொஞ்சம் துணிகளையும் எடுத்து வந்தான். ஆனாலும் அரவிந்திற்கு அது அணில் தானா என்பதில் கொஞ்சம் சந்தேகமும் இருந்தது. பெரிய அணிலை பார்த்திருக்கின்றான், ஆனால் குட்டி அணில் எப்படி இருக்கும் என தெரியவில்லை. பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் மொட்டைமாடியில் தண்ணீர் தொட்டிக்கு கீழே பாதுகாப்பான இடத்தில் அந்த மெத்தையையும் அணிலையும் வைத்துவிட்டு பள்ளிக்கு சென்றான். மாலை தன் நண்பர்கள் கீதா மற்றும் நந்தன் இருவரையும் அழைத்து வந்து காட்டினான். மதியம் சாப்பிடும்போதே அணிலைப்பற்றி சொல்லிவிட்டான். என்ன சாப்பாடு வைத்தாய் என்ற கேட்ட போது தான் அதற்கு சாப்பாடு வைக்க வேண்டிய நினைவு அரவிந்திற்கு வந்தது.

சில பழங்களை கீதாவும் நந்தனும் எடுத்து வந்திருந்தனர். இருவரும் அது அணில் தான் என்று உறுதி செய்தனர். ஏதோ பறவை ஒன்று அணிலை எடுத்துக்கொண்டு பறந்து சென்றபோது தவறி கீழே விழுந்திருக்க வேண்டும் அதனால் அடிபட்டிருக்கும் என்று யூகித்தனர். அணில் தண்ணீர் குடிக்குமா என அவர்களுக்கு தெரியவில்லை. இருந்தாலும் மொட்டை மாடியில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு வைத்த அகல் விளக்கு ஒன்று இருந்தது. அதில் தண்ணீர் நிரப்பி வைத்தனர். காலையில் செய்து வைத்த பாதுகாப்பினை விட மாலை மூவருமாக சேர்ந்த நல்ல பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். அணிலால் நகர முடியவில்லை. மேலும் அது சின்ன அணிலாக இருந்தது. மூவரும் சில நாட்கள் அணிலை பத்திரமாக பாதுகாத்தனர். காலை, மாலை எந்நேரமும் மொட்டைமாடியில் அணிலுடன் கழித்தனர்.

சில நாட்களில் அணில் நடமாட ஆரம்பித்துவிட்டது. “அரவிந்த், இதற்கு என்ன பெயர் வைக்கலாம்?” என்று கேட்ட போது தான் அதற்கு பெயரே வைக்கவில்லை என்பதை உணர்ந்தனர். மூன்று நாட்கள் ஆலோசனைக்கு பின்னர் அணிலுக்கு ‘மகி’ என்று பெயர் வைத்தனர்.

மகியின் காயம் ஆறிவிட்டது. மகி பெரிதாகவும் வளர்ந்து விட்டது. அரவிந்த் அதனை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டான். அரவிந்த் பேசுவது மகியிற்கு புரிந்தது. மகியின் வரவால் அரவிந்த் எப்போதும் மகிழ்ச்சியாக தான் இருந்தனான்.

ஒரு ஞாயிற்றுகிழமை காலை மகியிடம் “மகி. இப்ப நீ பெரிய அணிலாக மாறிவிட்டாய். இனி நீ எங்க வீட்டை மட்டுமே சுற்றி வரக்கூடாது. இன்னும் நிறைய ஊர்களையும் இடங்களையும் நீ பார்க்கவேண்டும். போ நண்பா. நிறைய இடங்களை பார். நிறைய நண்பர்களோடு பழகு. என்னைப் பார்க்க வேண்டும் போல இருந்தால் திரும்பி வந்து பாரு. உன்னை நான் மறக்க மாட்டேன். நீ எனக்கும் என் நண்பர்களுக்கும் நிறைய சந்தோஷம் கொடுத்தாய். நாங்கள் அடிக்கடி உன்னைப்பற்றி பேசுவோம். சரி. இப்ப நீ கிளம்பு” என்றான் அரவிந்த். அரவிந்த் இந்த முடிவினை அவன் நண்பர்களிடம் சொன்னபோது அவர்கள் மறுத்தனர். ‘மகி’ நம்முடனே இருக்கட்டுமே என்றார்கள். அரவிந்த் ‘இல்லை மகி நம்முடன் இருப்பது நமக்கு பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால் அவன் நிறைய இடங்களை பார்க்கவேண்டும். உண்மையான அன்பு அடுத்தவர் நலன் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்” என்றான். நண்பர்கள் ஒத்துக்கொண்டார்கள். அதன்பிறகே மகியுடன் இதனை கூறினான். மகிக்கு அவன் சொல்வது புரிந்தது.

மகி சில நிமிடம் அங்கேயே இருந்தது. பிறகு மொட்டை மாடியை நான்குமுறை சுற்றி வந்தது, அரவிந்த் மீது ஏறி ஏறி இறங்கியது. பின்னர் கிளம்ப தயாரானது. மகி கிளம்பிய சமயம் கீதாவும் நந்தனும் அரவிந்துடன் சேர்த்துகொண்டனர். மூவர் டாட்டா காட்டி மகியை அனுப்பி வைத்தனர். மகி பாய்ந்து பாய்ந்து மறைந்தது.



No comments:

Post a Comment