Friday, August 28, 2015

மாண்டோக்கள் செய்த உதவி


ஓ என்னு ஒரு மான் அழுதுகிட்டே வந்துது. அதனுடைய நண்பனை அந்தக் கொடூர புலி கொன்றுவிட்டது என்று தெரிவித்தது. இது கிட்டத்தட்ட வழக்கமாகிவிட்டது. சில மாதங்கள் முன்னர் வரையில் அந்தக் காட்டில் சுமார் ஐநூறு மான்கள் இருந்தன. இப்போது வெறும் நானூறு மான்கள் மட்டுமே இருக்கின்றன. என்னாச்சு அந்த நூறு மான்களுக்கும்? புதிதாக வேறு ஒரு காட்டில் இருந்து கொடூர புலி, மான்களின் காட்டிற்குள் நுழைந்துவிட்டது. தினம் 2-3 மான்கள் என வேட்டையாடி குவிக்கின்றது. மான்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. புலி வேகமாக வேறு ஓடுகின்றது தப்பிக்கவும் முடியவில்லை. புலியை சரிகட்ட என்ன செய்யலாம் என்று மான்கள் ஆலோசனை நடத்தின. இரவு ஒரு பெரிய மரத்தின் கீழ் கூடினார்கள். ஒரு மான் ”நாம் காட்டையே காலி செய்துகொண்டு வேற காட்டிற்குச் போய்விடலாம் அல்லது இங்கேயே இருந்து ஒவ்வொருவராக இறக்க வேண்டி இருக்கும்” என்றது. மற்றொன்று “அதெப்படி பிறந்த காட்டிவிட்டு வெளியே போவது?” என்றது. போகலாம் போகவேண்டாம் என மாறி மாறி ஆலோசனைகள் வந்தன.

'13 சிறப்பு மாண்டோக்களை அழைக்கலாம்' என்ற யோசனையை ஒரு புள்ளிமான் தெரிவித்தது. எல்லோரும் அந்த விநோத யோசனையை சொன்ன புள்ளிமானை கவனித்தனர். அதென்ன 13 சிறப்பு மாண்டோக்கள்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது. வயதான கவரிமான் ஒன்று அந்த சிறப்பு மான்களைப் பற்றி விளக்கியது. அவர்களை மாண்டோ என அழைப்பார்கள். அவர்களும் மான் தான். எதிரிகளைத் தாக்க சிறப்பு பயிற்சிகளை பெற்றவர்கள். அவை பத்து தென்னை மரங்கள் உயரம் வரை பாயும், புலிகளைவிட எட்டு மடங்கு வேகமாக ஓடும், காடே அதிரும்படியான சத்தங்களை எழுப்பும் என்றது. எல்லா மான்களுக்கும் நம்பிக்கை பிறந்தது. எல்லா மான்களைக் கைதட்டி அவர்களைக் கொண்டுவர ஒப்புதல் அளித்தன.

மறுநாள் காலையிலேயே ஊர் பெரியவர்கள் மாண்டோக்களை சந்திக்க கிளம்பினர். 13 சிறப்பு மாண்டோக்களிடம் அவர்கள் பிரச்சனையை தெரிவித்தனர். உதவி கேட்டார்கள். அவையும் மகிழ்வுடன் உதவி செய்ய சம்மதித்தது. அதன்படி ஒரு திட்டம் தீட்டியது. இது ரகசிய திட்டம், முக்கியமாக அந்த புலிக்கு தெரியக்கூடாது. ரகசியம் காப்பீர்கள் என்பதை திட்டம் உங்களுக்கும் சொல்லப்படுகின்றது.

சாதாரண மான்களுடன் இந்த 13 மாண்டோக்களும் கலந்து ஒன்றாகச் சுற்றுவது எனவும், அந்தப் புலி வந்த பின்னர் ஒவ்வொருவராக வலது பக்கம் அல்லது இடது பக்கமாக ஓடி தப்பிக்க வேண்டும். பாதுகாப்பான இடத்திற்கு சென்று காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். கடைசியில் அந்தச் புலியை இவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.

அன்றைய தினம் புலி மிகவும் பசியுடன் மான்களின் காட்டு பகுதிக்கு நுழைந்தது. தூரத்தில் நூற்றுக்கும் அதிகமான மான்கள் ஒன்றாகச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தன. அவைகளுடன் மாண்டோக்களும் கலந்து இருந்தன. சில மான்கள் தூரத்தில் புலி இருப்பதைக் காட்டி மற்ற மான்களை உஷார் செய்தது. புலி இவர்களை நெருங்கி மெதுவாக வந்தது. பதுங்கி பதுங்கி வருவதாக நினைத்துக்கொண்டது. திட்டப்படியே ஓட ஆரம்பித்த மான்கள் ஒவ்வொருவராக இடது புறமும் வலது புறமும் தப்பித்தனர். ஆரம்பத்தில் நூறு மான்களும் பதிமூன்று மாண்டோக்களும் இருந்தன. புலி வேகமாகத் துரத்தியது. கொஞ்ச நேரத்தில் ஐம்பது மான்கள் + பதிமூன்று மான்டோக்களானது. புலி இன்னும் வேகமெடுத்தது. கடைசியாக எல்லா மான்களும் தப்பித்து பதிமூன்று சிறப்பு மான்களும் புலியும் மட்டும் இருந்தது. புலிக்கு ஓடி ஓடி நிறையப் பசி எடுத்துவிட்டது. வழக்கத்தைவிட ஒரு 2 மான்களை அதிகம் சாப்பிட்டுவிட வேண்டும் என நினைத்தது. ஆனால் முன்னாடி இருந்த பதிமூன்று மான்களும் நன்றாக கொழு கொழுவென இருந்ததால் இரண்டு மான்களே போதும் என நினைத்தது.

மற்ற மான்கள் பாதுகாப்பாகப் போய்விட்டதைச் சரிபார்த்து மாண்டோக்கள் கண்ணடித்ததுக்கொண்டன. ஒரு விஷேஷ மான விநோதமான கொய்ய்ய்ய்ய்ங்க்க்க்க் என்ற சத்தத்தை ஓடியபடியே எழுப்பியது. காட்டையே கதிகலங்க வைத்தது அந்தச் சத்தம். பயங்கர சத்தம். திடீரென ஒரு மாண்டோ பத்து தென்னை மர உயரத்திற்குப் பாய்ந்தது. ஒரு மாண்டோ துரத்திக்கொண்டு வந்த புலியின் திசையில் ஓடி புலியை இரண்டு சுற்று சுற்றிவிட்டு திரும்பவும் தன் மாண்டோ கூட்டத்துடன் சேர்ந்தது. இவை அனைத்தும் கண் இமைக்கும் நேரத்தில் புஸுக் என நடந்தது. புலிக்கு லேசாகப் பயம் தொற்றிக்கொண்டது.

மாண்டோக்கள் ஓடுவதை நிறுத்திவிட்டது, புலியும் நின்றது. இரண்டும் எதிர் எதிரே நின்று கொண்டிருந்தன. பதிமூன்று மாண்டோக்களும் ஒன்றாகச் சத்தம் எழுப்பின. ஒரு மாண்டோ சத்தம் எழுப்பியதற்கே லேசான பயம் வந்து இருந்தது. சாதாரண மான்களுக்கு ஏற்கனவே காதை மூடிக்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது. மாண்டோக்கள் படுவேகமாக ஒரு பெரிய வட்டத்தை உருவாக்கின. புலி நடுவில் இருந்தது. புலியின் பசி எங்கே போனது என்று கூடத் தெரியவில்லை. அத்தனை கொடூரமான புலிக்கு பயம் வந்துவிட்டது. இவர்களை தாக்க முடியாது என தோன்றியது. இவர்களை தாக்குவதை விட தப்பிப்பதே சிறந்தது என புரிந்தது.

கிடைத்த ஒரு சின்னச் சந்தில் காட்டை விட்டு வெளியே செல்லும் திசையில் புலியின் வேகத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக அந்தப் புலி ஓடியது. இனி இந்தப் பக்கமே தலை வைக்கக்கூடாது என முடிவெடுத்தது. 13 சிறப்பு மான்களான மாண்டோக்களை மற்ற எல்லா மான்களும் வந்து பாராட்டி நன்றியை தெரிவித்தன. நிறைய பழங்களை அன்பின் அடையாளமாக கொடுத்தனர். இருட்டிக்கொண்டு வருவதால் விரைவில் ஊர் திரும்ப வேண்டும் அந்த மாண்டோக்கள் தங்கள் காட்டிற்குக் கிளம்பின. இனி எந்த பயமின்றி காட்டில் சுத்தலாம் என குட்டி மான்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தன.



No comments:

Post a Comment