Wednesday, September 30, 2015

குழந்தைகளை கடிதம் எழுத வைக்க ஒரு சிறு முயற்சி


கடிதப்போக்குவரத்து கிட்டத்தட்ட் 0%க்கு சென்றுவிட்டது. ஆனால் ஒரு கடிதம் கொடுக்கும் சுகத்தை அனுபவித்த தலைமுறையினர் நாம். அந்த சுவையை அடுத்த தலைமுறையினருக்கு சிறிதளவேனும் கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தை கடிதம் எழுதி கிடைக்கப்பெற்றவர் பதில் அளிக்காமல் போய்விட்டால் குழந்தை வருத்தம் கொள்ளுமே என கவலை வேண்டாம். ஏனெனில் உங்கள் குழந்தை எழுதப்போகும் கடிதத்திற்கு பதில் கடிதம் போடப்போவது அடியேன் தான். எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். கேட்ட கதை குறித்தோ, பள்ளி அனுபவம் குறித்தொ, விடுமுறை குறித்தோ, தன் நண்பர்கள் குறித்தோ, எதைப்பற்றி வேண்டுமானாலும் அனுப்பச்சொல்லுங்கள். 100% அதற்கு கடிதம் மூலம் பதில் கொடுப்பேன். ஒரு கடிதம் அவர்கள் பெயருக்கு வந்தால் அது கொடுக்கும் சந்தோஷம் அலாதியானது. இந்த செய்தியை பார்ப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த குழந்தைகளுக்கு கடிதங்களை எழுதுங்கள். இந்த முயற்சியின் நோக்கம் கடிதம் எழுதுவதை அதிகப்படுத்துவதும் அடுத்த தலைமுறையினருக்கு அந்த சுவையை கொடுப்பதும் தான்.

கடிதம் தமிழில் இருந்தால் நலம் . ஓவியங்களுடனும் வண்ணங்கள் கூடிய மழலைகளின் கடிதங்களை கையில் ஏந்த ஆவலுடன் காத்திருக்கின்றேன். கடிதம் எழுதியவுடன் ஒரு பிங் செய்யவும் வீட்டு முகவரியை அனுப்பி வைக்கிறேன். சர்வதேச கடிதங்களுக்கும் பதில் உண்டு.

கடைபிடிக்க வேண்டிய Whatsapp நாகரீகங்கள்


வாட்ஸப் ஒரு நெருக்கமான மூடப்பட்ட சமூக வலைத்தளம். அதனைப் பயன்படுத்தும்போது சில அடிப்படை நாகரீகங்களை கடைப்பிடிக்கலாம்.

1. வீடியோக்களை அனுப்பும்போது ஒரு இரண்டு வரியாவது அந்த வீடியோவைப்பற்றி பகிருங்கள். இந்த வீடியோ ஏன் பிடித்திருக்கின்றது, ஏன் பார்க்கவேண்டும், அதில் எதனை ரசித்தீர்கள் என விவரிப்பது நல்லது. சுமார் 10-15 MBக்கள் வரையிலான பெரிய வீடியோக்களுக்கு கூட ஒரு வரி விவரிப்பு இல்லை. உங்களுக்கு வசதியான இணைப்பு இருக்கலாம் ஆனால் எதிர்முனையில் இருப்பவரின் நிலையையும் நாம் பார்க்க வேண்டும். அதுவும் குழுக்களுக்கு அனுப்பும்போது அவசியம் இந்த நெறியை பயன்படுத்துதல் அவசியம்

2. ஏதாவது செய்தியை அனுப்புவதற்கு முன்னால் ஒரே ஒரு நொடி இதனை அனுப்பலாமா என யோசித்துவிட்டு அனுப்பலாம். பெரும்பாலான Forwardகள் இந்த ஒரு நொடி யோசனையில் குறையும். இதனால் பல பெயருடைய நேரத்தையும் சேமிக்கலாம்.

3.பதட்டம் ஏற்படுத்தும் Forwardகளை ஒருமுறை இணையத்தில் சரிபார்த்துவிட்டு அனுப்பலாம். நூற்றுக்கு நூற்று ஐம்பது சதவிகிதம் தவறான தகவல் கொண்ட Forwardகளே வருகின்றன. இந்த பெரும் வெள்ளத்தில் நல்ல தகவல்கள் தாங்கிவரும் செய்திகள் அடிபட்டுப்போகின்றது.

4. தொடர்பில் இருக்கும் ஒரே காரணத்திற்காக பல சமயங்களில் பல Forwardகள் செய்யப்படுகின்றன. அதனை தவிர்த்துவிடலாம்.

5. இந்த மெசேஜை பார்வர்ட் செய்தால் இன்னாருக்கு 1000 ரூபாய் கிடைக்கும் என்ற செய்திகளில் சுத்தமாக நம்பகத்தன்மை இல்லை. வாட்ஸப் அம்மாதிரியான எந்த வேலையையும் செய்யாது.

தரமான இணைய இணைப்பு இருப்பதாலேயே அதனை ஏகபோகத்திற்கு பயனபடுத்தலாம் என்பது தவறான மனப்போக்கு. வாட்ஸப் போன்ற நெருக்கமான இணைப்பினை சரியாக பயன்படுத்து முக்கியம்.

பியானாவின் பிறந்தநாள்


பியானாவிற்கு அன்று பிறந்தநாள். தன்னுடைய வீட்டில் அனைவருக்கும் விருந்து வைத்திருந்தாள். பியானா ஒரு மயில். அந்தப்பகுதி காட்டில் இருந்த அனைவரும் வருவதாக சொல்லி இருந்தார்கள். எல்லோரும் அருகருகே தான் வசித்து வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு. பியானாவின் வீடு இளமஞ்சள் நிறத்தில் இருந்தது. இரண்டு பெரிய குச்சிகளுக்கு மேலே அந்த வீடு இருந்தது. பறவைகள் எளிதாக பறந்து வந்துவிட்டன. ஆனால் சில விலங்குகளால் ஏற முடியவில்லை. யானையார் ஏற முடியாததால் முயல் ஒன்றிடம் தன் பரிசினை கொடுத்து அனுப்பினார். சிங்கம் பக்கத்து ஊரில் ஒரு பஞ்சாயத்திற்கு சென்றதால் வரமுடியவில்லை.

விருந்தினர் அனைவருக்கும் சூடான சூப் தயாராக இருந்தது. சோள சூப். சிலரால் சூடாக குடிக்க முடியவில்லை, அதனால் கொஞ்சம் ஆறிய பிறகு குடிக்கலாம் என்று காத்திருந்தனர். பியானாவின் முகத்தில் சோகம் தெரிந்தது. குக்கூ ஒன்று என்ன சோகம் என விசாரித்தது. தன்னுடைய நெருக்கிய நண்பர் விசாகன் இன்னும் வராதது தான் வருத்தம் என கூறியது பியானா. விசாகன் ஒரு பட்டாம்பூச்சி. மழை நாள் ஒன்றில் இருவரும் மரத்தின் கீழே சந்தித்தனர். பியானாவிற்கு பட்டாம்பூச்சியின் வண்ணம் பிடித்திருந்தது. விசாகனுக்கும் பியானாவின் இறகு பிடித்திருந்தது. விசாகனுக்கு தன் இறகு ஒன்றினை பியானா கொடுத்தாள். அதனை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச்சென்று வைத்திருப்பதாக விசாகன் ஒரு நாள் கூறினான்.

வீட்டின் கீழே இருந்து டிங்டாங் என மணி அடித்தது. விசாகன் தான் விருந்திற்கு வந்திருக்கின்றான் என பியானா கீழே ஓடினாள். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. விசாகன் வரவில்லை. அங்கே வந்திருந்தது பக்கத்து ஊரில் கேக் கடை வைத்திருக்கும் கரடி ஒன்று. “உங்கள் பிறந்தநாளுக்காக இந்த கேக்கினை கொடுக்கும்படி விசாகன் என்ற வண்ணத்துப்பூச்சி பணம் கொடுத்து இருந்தது. இங்கே யார் பியானா” என்றது. நான் தான் பியானா என்றதும் பிறந்தநாள் வாழ்த்துகள் என சொல்லிவிட்டு கைக்குலுக்கி விடைபெற்றது கரடி.

கேக்கினை எடுத்து வீட்டிற்குள் நுழைந்தது. எல்லோரும் கைத்தட்டினார்கள். ஆஹா கேக் வந்துவிட்டது. விருந்து களைகட்டுகின்றது என்றனர். ஆனாலும் பியானாவின் முகத்தில் இன்னும் சிரிப்பு வரவே இல்லை. குக்கூ, தானே விசானனின் வீட்டிற்கு சென்று என்ன நடந்தது என பார்த்துவிட்டு வருவதாக கிளம்பியது. விசாகனின் வீடு அதிக தூரம் இல்லை. அந்த வீட்டில் இருபது வண்ணத்துப்பூச்சிகள் வசிக்கின்றன. குக்கூ சென்ற போது வீட்டில் ஐந்து பேர் மட்டுமே இருந்தனர். விசாகன் எங்கே என விசாரித்தது குக்கூ. காலையிலேயே வெளியே கிளம்பிவிட்டது, யாருக்கோ பிறந்தநாளாம் அதனால் விருந்து இருக்கின்றது அதனால் இரவு உணவு கூட வேண்டாம் என சொல்லிவிட்டு கிளம்பியது என்றனர் அறைவாசிகள்.

குக்கூவிற்கு பதட்டமாகிவிட்டது. விருந்திற்கு வருவதாக சொல்லிவிட்டு எங்கே சென்றது விசாகன். பியானா வீட்டிற்கு பறந்தது. குக்கூவிடம் இருந்து செய்தி வந்தது கேக் வெட்டுவற்கு காத்திருந்தது பியானா. குக்கூவின் சோக முகத்தை பார்த்ததும் செய்தி புரிந்துவிட்டது. எங்கோ காணவில்லை. விசாகனுக்கு ஏதோ நடந்துவிட்டது. சரி விருந்திற்கு வந்திருப்பவர்கள் வருத்தப்படக்கூடாது, கேக்கை வெட்டுவோம் என எல்லாம் தயாரானார்கள்.

கடைசி நிமிடம் வரையில் வெளியே பார்த்தது பியானா. கேக்கில் கத்தி பட்டதும் டமால் என சத்தம். அது கேக் அல்ல. மேலே க்ரீம் தடவப்பட்ட பலூன். பலூன் வெடித்து உள்ளே இருந்து பதினைந்து வண்ணத்துப்பூச்சிகள் வெளியே வந்தது. “பிறந்தநாள் வாழ்த்துகள் பியானா..பிறந்தநாள் வாழ்த்துகள் பியானா” என அனைத்தும் ஒரே குரலில் பாடின. விருந்தினர்களும் சேர்ந்துகொண்டார்கள். உண்மையான கேக்கை கரடி மீண்டும் எடுத்து வந்திருக்கின்றது என தெரிவித்தது விசாகன். குக்கூ அதனை வாங்கி வந்து அனைவருக்கும் கொடுத்தது. பியானா மகிழ்ந்தாள். தன் தோழி பியானா மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த விசாகனுக்கும் அளவற்ற மகிழ்ச்சி.

(இந்த ஓவியத்தை வரைந்தவர் ப்ரவீன் துளசி. இந்த கதைக்காகவே பிரத்தியேகமாக வரைந்தார்)

இரவு நேரக்கதைகள் செய்யும் மாயமென்ன?


இரவு நேரக்கதைகளில் ஒன்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு புத்தகத்திலிருந்து வாசித்து காட்டுவது அல்லது தானாக கதைகள் சொல்வது. இரண்டாவது குழந்தைகள் தானாக ஒவ்வொரு இரவும் வாசிப்பது. அந்த சமயம் பெற்றோர் உடன் இருப்பது மேலும் சுவாரஸ்யத்தை கூட்டும். இரவு நேரக்கதைகளை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லும்போது என்ன நேர்கின்றது?

1. குழந்தைகளுடன் நேரம் செலவழித்தல் ஒரு நாளின் ஒட்டுமொத்த இறுக்கத்தையும் போக்க வல்லது கதைகள். பெற்றோருக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கு நிறைய இறுக்கம் இருக்கும். சக குழந்தையுடன் சண்டை, நினைத்தது செய்யமுடியாமல் போவது, பெற்றோரிடம் திட்டு வாங்குவது, விளையாட்டு என நிறைய இறுக்கம் இருக்கலாம். இரவு தூங்குவதற்கு முன்னர் அதனை தகர்ப்பது என்னது சுவாரஸ்யமான விஷயம்? கதைகள் அதனைச் செய்யும்

2, புதியவை அறிமுகம் புதிய சொற்கள், புதிய உயிரினங்கள், புதிய செடிகள், புதிய மரங்கள், புதிய விலங்குகள், புதிய மனிதர்கள். ஆதிகாலத்தின் கற்பனை உலகம், யாருமற்ற புதிய உலகம் என பற்பல புதிய விஷயங்கள் அறிமுகமாகின்றன. வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல கதையின் ஊடாக பல்வேறு சத்தங்களும் அறிமுகமாகும். கதை சொல்லும்போது பெற்றோர்கள் கொஞ்சம் அதனை செய்யலாம். அது கதையினை சுவாரஸ்யமாக்குவதோடு அல்லாமல் அந்த சத்தமும் அவர்களுக்கு உள்ளே செல்லும்.

3. உரையாடலுக்கான சாத்தியங்கள் கதை சொல்லும் ஆரம்ப நாட்களில் உங்கள் குழந்தைகள் அதிகமாக கதையினை குறுக்கிடுவார்கள். கதையை குதறுவார்கள்/ கதாபாத்திரங்களை மாற்றுவார்கள், அவர்களுக்கு விருப்பமான பெயர்களை உள்ளே நுழைப்பார்கள். இது மிக இயல்பானது. கதையை சொல்ல முடியவில்லையே என வருத்தமே வேண்டாம். இது தான் கதை சொல்லலின் வெற்றி. அப்படி அவர்கள் குறுக்கிடும்போது பேச விடுங்கள். அவர்களின் உலகினை உள்வாங்க இதைவிட சிறப்பான சந்தர்ப்பம் உங்களுக்கு அமைந்துவிடப்போவதில்லை. மெல்ல மெல்ல கதை கேட்க ஆரம்பிப்பார்கள். கதை சொல்லும்போது அவர்களையும் கதைசொல்லலில் ஈடுபடுத்த வேண்டும், எங்கே விட்டேன், அந்த மான் பேரு என்ன சொன்னேன், அந்த காக்கா நிறம் என்ன ? அப்படி…

4, கேட்கும் திறன் இதைத்தான் நாமும் இழந்திருக்கின்றோம். பெரிய காதுகள் தேவைப்படுகின்றது. குழந்தை வளர்ப்பில் இது முக்கியமான ஒன்று. அதே போல குழந்தைகளுக்கு இந்த கேட்கும் திறனை வளர்த்தெடுப்பது அவசியம். அவர்களுடைய கவனை அலைபாய்ந்து கொண்டே இருக்கும் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தவும் குவிய வைத்தால் தான் பின்நாட்களில் அவர்களின் வலுவான ஆளுமைக்கு வித்திடும். கதைகளை சொல்லச் சொல்ல அவர்களின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

5, கற்பனை வளம் கற்பனைத்திறன் வளர்க்கும் என சொன்னால் என் குழந்தை ஒன்னும் கதை எழுத தேவையில்லை, ஓவியம் வரையத்தேவையில்லை என பேச்சு அடிபடும். ஆனால் கற்பனைத்திறன் என்பது வெறும் கலைகளில் கவனம் செலுத்த அல்ல. அது வாழ்வின் அன்றாட தேவைகளில் உதவும். ஒரு அறையில் நான்கு சோபாக்களை போடவேண்டும் இடமும் வசதியாக இருக்க வேண்டும் அதனை திறம்பட நடைமுறைப்படுத்த கற்பனை வளம் வேண்டும். கதைகள் அவர்களுடைய கற்பனை உலகினை பெரியதாக்குகின்றன. கதை கேட்கும் போது சொல்லும் கதையை ஒரு வீடியோவாக மனதில் ஓட்டிப்பார்க்கின்றான். விடுபட்ட விஷயங்களை தன் கற்பனை உலகில் தானே நிரப்பி முழுமையாக பார்க்கின்றான். கதை கேட்பதிலும் வாசிப்பதிலும் தான் இது சாத்தியமாகும்.

கதை கேட்டலின் அடுத்த கட்டம் தானாக வாசித்தல். இதனை 7-8 வயது முதல் செய்யலாம். ஆரம்பத்தில் பெற்றோருடன் அமர்ந்து கூட்டாக வாசித்தலில் ஆரம்பிக்கலாம். இந்த பெரிய உலகினை வாசித்தல் மூலமே மேலும் கற்றுக்கொள்ளலாம் என கதைகள் சொல்லிக்கொடுத்துவிடும்.

இப்படி நன்மைகள் இருக்கே என கதை சொல்ல முற்பட வேண்டாம். கதையே ஒரு மகிழ்ச்சியான் அனுபவம். அதற்காகவேனும் கதைகள் சொல்லலாம், அது உங்கள் குழந்தையின் மொழி வளத்தை, கற்பனைத்திறனை, விலாசமானை பார்வையை, கேள்வி கேட்கும் பாங்கினை, காதுகொடுத்து கேட்கும் பண்பினை, வாழ்வின் மதிப்பீடுகளை, நெறிகளை வளர்த்தெடுக்கும் என்பதில் ஐயமே இல்லை. உங்கள் சிரமமானது சரியான கதைகளை சேகரிப்பதும் கொஞ்சம் மெனக்கெட்டு முன்னரே வாசித்துவிடுவதும், குழந்தைகளுடன் அமர்ந்து அந்த கதைகளை சொல்வது தான். நம் குழந்தைகளுக்காக இதனை செய்தே தீரவேண்டும். வளர்ப்பது மட்டுமல்ல நம் கடைமை அவர்களை உயர்த்துவதும் நம் கடமையே.

Friday, August 28, 2015

அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை


நிலாவிடன் ஏற்கனவே பேசியபடி அந்த இரவு மொட்டைமாடியில் இருந்து பட்டம் விட்டான். நிலா கொஞ்சம் கீழ் இறங்கிவந்து பட்டத்தின் ஒரு முனையை பிடித்துக்கொண்டது. நூலை பிடித்து மேலே ஏறி நிலாவில் அமர்ந்தான் சரண். நிலாவில் இருந்து பூமி சிறியதாக இருந்தது. கீழே இருந்த ஒவ்வொரு பகுதியாக காட்டியபடி வந்தது நிலா. நிலாவிற்கு சகல மொழிகளும் தெரியும் அதோ இமய மலை, அதோ சீனப்பெருஞ்சுவர், அதோ ஜப்பான், அதோ பசபிக் பெருங்கடல் என காட்டியபடியே வந்தது. முதுகில் மாட்டியிருந்த பள்ளிப்பையை கீழே இறக்கி வைத்தான். அதில் இருந்த கலர் பென்சில்களை எடுத்த “நான் சில நட்சத்திரங்களுக்கு வண்ணம் தீட்டப்போகிறேன்” என்றான். “வேண்டாம் சரண், பூமியில் இருக்கும் மக்கள் பயந்துவிடுவார்கள்” என்று சொன்னதை கேட்காமல் வண்ணம் தீட்டினான். திடீரென வானத்தில் வண்ண வண்ண நட்சத்திரங்களை பார்த்து நிஜமாகவே மக்கள் பயந்துவிட்டனர். ::உலகிற்கு ஆபத்து என கடவுளை வேண்ட ஆரம்பித்தனர். தன் பாட்டிலில் இருந்த தண்ணீரைக்கொண்டு வண்ணம் தீட்டிய நட்சத்திரங்களை கழுவினான். பூமியில் வண்ண மழை. கடல் மஞ்சள் நிறத்திற்கு மாறிவிட்டது.

கொஞ்ச நேரம் தூங்கலாம் என படுத்ததும் “ஐயோ காப்பாத்துங்க ஐயோ காப்பாத்துங்க” என அழுகை சத்தம். தீபாவளி ராக்கெட் பிடித்து ஒரு சீன சிறுவன் வானத்திற்கு வந்துவிட்டிருக்கான். ஒரு நட்சத்திரத்தில் அந்த ராக்கெட் குத்தி அந்த சிறுவன் தொங்கிக்கொண்டிருந்தான். “சரண், அந்த பையனை” காப்பாத்து என்றது நிலா



==============================

(அந்தரத்தில் நடந்த அபூர்வக் கதை - ஜனவரி 2013ஆம் ஆண்டு வெளிவந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய விருதும் பெற்றது. இது அதனுடைய ஷார்ட் வெர்ஷன்)

உருமாறும் நண்பன்


பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அபிநயா சோகமாக இருந்தாள். பள்ளியில் தன் தோழியுடன் சின்ன சண்டை. தன்னுடைய அறைக்கு வந்து அவளுடைய நண்பர்கள் எங்கே என தேடினாள். “மேகம்...மேகம்” என அழைத்தாள். பீரோவிற்கு பின்னால் இருந்து சொயிங் என உத்திரத்திற்கு சென்றன. சோகமாக இருந்ததை புரிந்து கொண்ட மேகங்கள் அவளுக்கு விளையாட்டு காட்டின. விதவிதமான உருவங்களாக மாறின. ஓடும் சிங்கம், குதிக்கும் யானை, பெரிய்ய்ய்ய மீன். அம்மா வந்து இரவு உணவினை ஊட்டிவிட்டு சென்றாள். “காலையில சீக்கிரம் எழுந்துக்கோ அபிநயா, ஓட்டப்பந்தையம் இருக்கு. காலையில 5 மணிக்கு எழுந்துக்கோ” எனச் சொல்லிவிட்டு போய்விட்டாள். தூங்க நேரமாச்சு நீங்க போங்க என்றாள். மேகங்கள் போகவேயில்லை. “சொல்றேன் இல்ல, போங்க” என்றாள். சன்னலை திறந்துவைத்தாள். மேகங்கள் வெளியே போவதற்கு பதிலாக தன்னுடைய மற்றொரு நண்பன் தென்றலை சன்னல் வழியே அழைத்தனர். தென்றல் வந்ததும் சில நிமிடங்களில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள் அபிநயா. உறங்கும் முன்னர் காலையில 5 மணிக்கு எழுந்துக்கனும் 5 மணிக்கு எழுந்துக்கனும் என முனுமுனுத்தாள்.

சரியாக காலை ஐந்து மணிக்கு அபிநயா விழித்தாள். தானாக விழிக்கவில்லை யாரோ அவள் முகத்தில் தண்ணீர் அடித்ததால் விழித்தாள். “டொக் டொக் டொக்” என கதவு தட்டும் சத்தம். “அபிநயா, அங்க உன் அறையில் என்ன இடி சத்தம்?”. மேகங்கள் அறையில் காணவில்லை.



டங்


போட்டியாளர்கள் எல்லாம் வந்துவிட்டார்களா என ஒருங்கிணைப்பாளை சரி சார்த்துக்கொண்டிருந்தார். ஒருவர் மட்டும் வரவில்லை. அது குண்டு எரிதல் போட்டி. காட்டில் நடக்கும் விளையாட்டு தினத்திற்காக இந்த போட்டி நடைபெறுகின்றது. மிகிகா என்ற மனிதக்குரங்கு, டாம்பு என்ற கங்காரு, கிங்கு என்ற கருங்குரங்கு முக்கிய போட்டியாளார்கள். மூவரும் இந்தியாவின் மற்ற காடுகளில் நடக்கும் குண்டெறிதல் போட்டியில் பல பரிசுகளை வென்று இருக்கின்றர்கள். குண்டு எரிதல் போட்டியில் பெரிய குண்டு இருக்கும் அதனை யார் வெகுதூரம் வீசுகின்றார்களோ அவர்களே வெற்றிபெற்றவர். மிகிகா தான் போட்டியில் வெல்லும் என கூடி இருந்த பார்வையாளர்கள் பேசிக்கொண்டார்கள். அந்த ஒரே ஒரு போட்டியாளர் வரவில்லை என்று இன்னும் போட்டி ஆரம்பிக்கவில்லை. அந்த போட்டியாளர் விளையாட்டு திடலுக்கு நுழைந்தார். அவர் அணில். பெரிய அணில் கூட அல்ல, குட்டி அணில். அரங்கமே சிரித்தது இந்த அணிலால் குண்டை தூக்க கூட முடியாது இது போய் எப்படி போட்டியில் கலந்துகொள்ளும் என கிண்டல் அடித்தார்கள்.

மிகிகா, கிங்கு, டாம்பு என எல்லோரும் குண்டு வீசிவிட்டார்கள். மிகிகா தான் அதிக தூரம் வீசி இருந்தது. அந்த அணில் குண்டு வீச வந்தது. கெக்கெக்கே கெக்கே என அரங்கம் சிரித்தது. “பம்பம்போலே பல்பம்போலே” என சொல்லிவிட்டு குண்டினை கஷ்டப்பட்டு எடுத்தது. மூன்று முறை சுற்றிவிட்டி ஸ்வயிங் என வானத்தில் அந்த குண்டை வீசியது. 1 நிமிடம், 2 நிமிடம், 4 நிமிடம், 1 மணி நேரம் பார்த்தார்கள், குண்டு கீழ விழவே இல்லை. ஒரு நாள் பார்த்தார்கள் அப்போதும் கீழே விழவில்லை. மூன்று வாரம் கழித்து ஆப்ரிக்கா காட்டில் “டங்” என பெருத்த சத்தம்.