Wednesday, September 30, 2015

பியானாவின் பிறந்தநாள்


பியானாவிற்கு அன்று பிறந்தநாள். தன்னுடைய வீட்டில் அனைவருக்கும் விருந்து வைத்திருந்தாள். பியானா ஒரு மயில். அந்தப்பகுதி காட்டில் இருந்த அனைவரும் வருவதாக சொல்லி இருந்தார்கள். எல்லோரும் அருகருகே தான் வசித்து வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வீடு. பியானாவின் வீடு இளமஞ்சள் நிறத்தில் இருந்தது. இரண்டு பெரிய குச்சிகளுக்கு மேலே அந்த வீடு இருந்தது. பறவைகள் எளிதாக பறந்து வந்துவிட்டன. ஆனால் சில விலங்குகளால் ஏற முடியவில்லை. யானையார் ஏற முடியாததால் முயல் ஒன்றிடம் தன் பரிசினை கொடுத்து அனுப்பினார். சிங்கம் பக்கத்து ஊரில் ஒரு பஞ்சாயத்திற்கு சென்றதால் வரமுடியவில்லை.

விருந்தினர் அனைவருக்கும் சூடான சூப் தயாராக இருந்தது. சோள சூப். சிலரால் சூடாக குடிக்க முடியவில்லை, அதனால் கொஞ்சம் ஆறிய பிறகு குடிக்கலாம் என்று காத்திருந்தனர். பியானாவின் முகத்தில் சோகம் தெரிந்தது. குக்கூ ஒன்று என்ன சோகம் என விசாரித்தது. தன்னுடைய நெருக்கிய நண்பர் விசாகன் இன்னும் வராதது தான் வருத்தம் என கூறியது பியானா. விசாகன் ஒரு பட்டாம்பூச்சி. மழை நாள் ஒன்றில் இருவரும் மரத்தின் கீழே சந்தித்தனர். பியானாவிற்கு பட்டாம்பூச்சியின் வண்ணம் பிடித்திருந்தது. விசாகனுக்கும் பியானாவின் இறகு பிடித்திருந்தது. விசாகனுக்கு தன் இறகு ஒன்றினை பியானா கொடுத்தாள். அதனை பத்திரமாக வீட்டிற்கு எடுத்துச்சென்று வைத்திருப்பதாக விசாகன் ஒரு நாள் கூறினான்.

வீட்டின் கீழே இருந்து டிங்டாங் என மணி அடித்தது. விசாகன் தான் விருந்திற்கு வந்திருக்கின்றான் என பியானா கீழே ஓடினாள். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. விசாகன் வரவில்லை. அங்கே வந்திருந்தது பக்கத்து ஊரில் கேக் கடை வைத்திருக்கும் கரடி ஒன்று. “உங்கள் பிறந்தநாளுக்காக இந்த கேக்கினை கொடுக்கும்படி விசாகன் என்ற வண்ணத்துப்பூச்சி பணம் கொடுத்து இருந்தது. இங்கே யார் பியானா” என்றது. நான் தான் பியானா என்றதும் பிறந்தநாள் வாழ்த்துகள் என சொல்லிவிட்டு கைக்குலுக்கி விடைபெற்றது கரடி.

கேக்கினை எடுத்து வீட்டிற்குள் நுழைந்தது. எல்லோரும் கைத்தட்டினார்கள். ஆஹா கேக் வந்துவிட்டது. விருந்து களைகட்டுகின்றது என்றனர். ஆனாலும் பியானாவின் முகத்தில் இன்னும் சிரிப்பு வரவே இல்லை. குக்கூ, தானே விசானனின் வீட்டிற்கு சென்று என்ன நடந்தது என பார்த்துவிட்டு வருவதாக கிளம்பியது. விசாகனின் வீடு அதிக தூரம் இல்லை. அந்த வீட்டில் இருபது வண்ணத்துப்பூச்சிகள் வசிக்கின்றன. குக்கூ சென்ற போது வீட்டில் ஐந்து பேர் மட்டுமே இருந்தனர். விசாகன் எங்கே என விசாரித்தது குக்கூ. காலையிலேயே வெளியே கிளம்பிவிட்டது, யாருக்கோ பிறந்தநாளாம் அதனால் விருந்து இருக்கின்றது அதனால் இரவு உணவு கூட வேண்டாம் என சொல்லிவிட்டு கிளம்பியது என்றனர் அறைவாசிகள்.

குக்கூவிற்கு பதட்டமாகிவிட்டது. விருந்திற்கு வருவதாக சொல்லிவிட்டு எங்கே சென்றது விசாகன். பியானா வீட்டிற்கு பறந்தது. குக்கூவிடம் இருந்து செய்தி வந்தது கேக் வெட்டுவற்கு காத்திருந்தது பியானா. குக்கூவின் சோக முகத்தை பார்த்ததும் செய்தி புரிந்துவிட்டது. எங்கோ காணவில்லை. விசாகனுக்கு ஏதோ நடந்துவிட்டது. சரி விருந்திற்கு வந்திருப்பவர்கள் வருத்தப்படக்கூடாது, கேக்கை வெட்டுவோம் என எல்லாம் தயாரானார்கள்.

கடைசி நிமிடம் வரையில் வெளியே பார்த்தது பியானா. கேக்கில் கத்தி பட்டதும் டமால் என சத்தம். அது கேக் அல்ல. மேலே க்ரீம் தடவப்பட்ட பலூன். பலூன் வெடித்து உள்ளே இருந்து பதினைந்து வண்ணத்துப்பூச்சிகள் வெளியே வந்தது. “பிறந்தநாள் வாழ்த்துகள் பியானா..பிறந்தநாள் வாழ்த்துகள் பியானா” என அனைத்தும் ஒரே குரலில் பாடின. விருந்தினர்களும் சேர்ந்துகொண்டார்கள். உண்மையான கேக்கை கரடி மீண்டும் எடுத்து வந்திருக்கின்றது என தெரிவித்தது விசாகன். குக்கூ அதனை வாங்கி வந்து அனைவருக்கும் கொடுத்தது. பியானா மகிழ்ந்தாள். தன் தோழி பியானா மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த விசாகனுக்கும் அளவற்ற மகிழ்ச்சி.

(இந்த ஓவியத்தை வரைந்தவர் ப்ரவீன் துளசி. இந்த கதைக்காகவே பிரத்தியேகமாக வரைந்தார்)

No comments:

Post a Comment